தடுப்பூசி போட்டால் 'கஞ்சா' இலவசம்.. கொரோனா வேக்சினை ஊக்குவிக்க.. வேற லெவலுக்கு சென்ற அமெரிக்கா
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாகக் கஞ்சா வழங்கும் திட்டத்திற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா பரவல் கடந்த 2 ஆண்டுகளாக உலகையே புரட்டிப் போட்டு வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டன
பின்தங்கிய & வளரும் நாடுகள் மட்டுமின்றி வளர்ந்த நாடுகளையும் கூட கொரோனா பரவல் விட்டு வைக்கவில்லை. அமெரிக்கா. பிரிட்டன் போன்ற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாகவே இருந்தது.

அமெரிக்கா கொரோனா பாதிப்பு
குறிப்பாக, கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு சுமார் 3.4 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 6 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு டிரம்ப் ஆட்சியில் இருந்தபோதே கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மிக மோசமான ஒரு நிலையில் இருந்தது. அதன் பின்னரே, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

பைடன் நிர்வாகம்
முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்க நிர்ணயத்து அந்நாட்டு அரசு இயங்கியது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாகாணங்களும் புதிய திட்டங்களையும் அறிவித்தனர். ஊக்குவிப்பு திட்டங்களை முழுமையாக ஆதரிப்பதாக பைடன் நிர்வாகம் அறிவித்திருந்தன. அதன்படி பல மாகாணங்களும் இலவச பீர், லாட்டரி போன்ற திட்டங்களை அறிவித்துள்ளன.

இலவசமாகக் கஞ்சா
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் அடுத்த லெவலுக்கே சென்றுவிட்டது. ஆம், அங்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாகக் கஞ்சா வழங்கும் joints for jabs திட்டத்திற்கு அம்மாகாண அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 21 வயதைக் கடந்தவர்களுக்கு இலவசமாகக் கஞ்சா வழங்கப்படும்.

joints for jabs திட்டம்
வாஷிங்டன் மாகாணத்தில் இதுவரை 58% குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல 49% மக்களுக்குத் தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த joints for jabs திட்டம் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை மேலும் ஊக்குவிக்கும் என அம்மாகாண அரசு அறிவித்துள்ளது. முன்னதாக அரிசோனா மாகாணத்திலும் இதேபோல தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவச கஞ்சா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கச் சட்டம் சொல்வது என்ன
அமெரிக்காவின் மத்திய அரசின் சட்டப்படி கஞ்சா தற்போது வரை தடை செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள்தான். ஆனாலும், அங்கு மாகாண அரசின் சட்டமே பிரதானம். அதன்படி அமெரிக்காவில் 36 மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்தச் சட்ட ரீதியான அனுமதி உள்ளது. இதற்காக அங்கு சிறப்புக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 14 மாகாணங்களில் மட்டுமே கஞ்சாவை பயன்படுத்தத் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications