தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்..சபரிமலை மண்டல பூஜையில் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
சபரிமலை:
ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் 26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு அன்று மாலை 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். மண்டல பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தேவசம்போட்டு அறிவித்துள்ளது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த வருடம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் நெரிசலை தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
அதாவது ஒரு நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. உடனடி முன்பதிவு நடைமுறையும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி 26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்காக பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க அங்கி ஊர்வலம் நாளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தங்க அங்கி கொண்டு வரப்படுகிறது.
சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நாளில் அணிவிக்க 1973ஆம் ஆண்டு, திருவிதாங்கூர் மன்னன் குடும்பம் 453 பவுன் எடை கொண்ட இந்தத் தங்க அங்கியைக் காணிக்கையாக வழங்கி உள்ளனர். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துவரப்பட்ட தங்க அங்கிக்கு பக்தர்கள் வழி நெடுகிலும் வரவேற்பு கொடுப்பார்கள். இந்த ரதம் ஓமலூர், முருங்கமங்கலம், பெருநாடு சாஸ்தா கோயில் வழியாக
தென்காசி, செங்கோட்டை, அச்சன்கோவில், பத்தனம்திட்டா வழியாக வரும் தங்க அங்கி ஊர்வலம்
டிசம்பர் 26 பிற்பகல் 1.30 மணிக்கு பம்பை வந்தடையும் பின்னர், அங்கிருந்து தலை சுமையாக தங்க அங்கி, சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து பதினெட்டாம் படி வழியாக தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கோவில் தந்திரி மற்றும் மேல் சாந்தியிடம் ஆபரண பெட்டி ஒப்படைக்கப்படும்.
இதனைப் பெற்றுக்கொண்ட மேல்சாந்தி ஐயப்பனுக்கு தங்க அங்கியை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்வார் தொடர்ந்து சிறப்பான தீபாராதனை நடைபெறும். 453 சவரன் தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனை காண்பதற்கே கோடி கண்கள் வேண்டும்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 27ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். அன்று இரவு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பிறகு மகர விளக்கு பூஜைக்காக 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.
தங்க அங்கி மலைக்கு எடுத்து வருவதையொட்டி 26ஆம் தேதி மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்றைய தினம் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசன முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மண்டல பூஜை நடைபெறும் 27ஆம் தேதி சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.இதனையொட்டி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். மகர ஜோதியை காணவும் ஐயப்பனை தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர்.