சபரிமலை வரும் பக்தர்களே.. பம்பையில் சமையல் செய்யக்கூடாது.. தடை விதித்த தேவஸ்தானம்
சபரிமலை: ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சமையல் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகம் தடை விதித்துள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதி இல்லை என்றும் தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள், சன்னிதானத்திற்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. அன்று இரவு கோவில் நடை அடைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. வரும் 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறுவதையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
முன்பதிவு அடிப்படையில் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் உடனடி முன்பதிவு மூலமாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் மகர விளக்கு பூஜை சமயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்பதால், நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது குறித்து மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்க சபரிமலைக்கான சிறப்பு அதிகாரியான கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டு விஷ்ணுராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அதிகாரி அஜி, துணை அதிகாரி தபோஸ் பஸ்மதரி, செயல் அதிகாரி கிருஷ்ணகுமார், துணை கமாண்டர் விஜயன் மற்றும் அனைத்து துறை முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதி இல்லை என்றும் தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள், சன்னிதானத்திற்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்கு ஏற்றி வரும் டிராக்டர்கள் கண்காணிக்கப்படும் என்றும் சமையல் செய்யும் பாத்திரங்களை சன்னிதானத்தில் விற்பனை செய்யும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 11ஆம் தேதி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் மகரவிளக்கு பூஜையை பார்ப்பதற்காக ஆங்காங்கே தங்குவது வழக்கம். இந்த ஆண்டும் அது போல் பக்தர்கள் தங்க வாய்ப்பு உள்ளது. ஆனால், பக்தர்கள் பம்பை முதல் சன்னிதானம் வரையிலான பகுதிகளில் பக்தர்கள் சமைக்க அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பம்பை முதல் சன்னிதானம் வரை அனைத்து இடங்களிலும் வருவாய், தேவஸ்தானம், காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் நின்று 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில், ஆங்காங்கே ஆம்புலன்ஸ் நிறுத்தவும் ஏற்பாடு செய்ய இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.