திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்..கிரிவலத்தில் தரிசிக்க வேண்டிய கோவில்கள்
திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் கோலகலமாகத் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு
சாமி தரிசனம் செய்தனர். டிசம்பர் 3 ஆம் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. 6ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
மலையே சிவமாக காட்சித்தரும் ஸ்தலம் திருவண்ணாமலை..சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். இங்கு ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் திருக்கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24ஆம்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25ஆம் தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்றைய விநாயகர் உற்சவம் நடந்தது.
பாக்கதான் பாட்டி.. ஆனா தொழில்ல கில்லாடி! ரூ.6 லட்சம் மதிப்பிலான நகையை ஸ்கெட் போட்டு தூக்கிய மூதாட்டி
தீப திருவிழா கொடியேற்றம்
இன்றைய தினம் காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் காவல்துறையினர் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர். அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.10 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.
அண்ணாமலையார் வீதி உலா
முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெற உள்ளன.
மகா தேரோட்டம்
வருகிற 30ஆம் தேதி புதன்கிழமை வெள்ளி கற்பக விருட்சகம், வெள்ளி காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன. வருகிற 1ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனம், 2ஆம் தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது. 3ஆம் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்களில் உற்சவர்கள் வலம் வர உள்ளனர்.
மலை மீது மகாதீபம்
6ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிவலப்பாதையில் தரிசனம்
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
தீப திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அண்ணாமலையாரே ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். கார்த்திகை மாதம் தீபம் திருவிழா முடிந்து கிரிவலம் வருவார். அதே போல தை மாதம் 2ஆம் நாள் கிரிவலம் வருவார். கிரிவலம் வருவதற்கு ஒரு முறை உள்ளது. அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வந்து மீண்டும் ராஜ கோபுரத்தில் முடிக்க வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும், ஆசிரமங்களையும், கோவில்களையும் தரிசனம் செய்ய வேண்டும்.
அஷ்ட லிங்க தரிசனம்
இந்திர நந்தீஸ்வரர் அஷ்ட நந்தியில் தொடங்க வேண்டும். இந்திர லிங்கம், கற்பக விநாயகர், காமாட்சி அம்மன் கோவில், பாணிபத்திரர் கோவில், அக்னிதீர்த்த குளம், அக்னி லிங்கம், சேஷாத்திரி ஆசிரமம், காளியம்மன் கோவில், தட்சிணாமூர்த்தி கோவில், ரமணா ஆசிரமம், யோகி ராம் சூரத்குமார் ஆசிரமம், ஆறுமுகப் பெருமாள் கோவில், சிங்க தீர்த்தம், எமலிங்கம், எமநந்தீஸ்வரர், துர்வாச கோவில், துர்வாச நந்தி, சோனாநந்தி, சோனா தீர்த்தம், ஜோதி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், ஈஸ்வர தொண்டு செய் நந்தி, திருதி லிங்கம்.
54 கோவில்கள் சாமி தரிசனம்
அருட்பெருஞ்சோதி கோவில், திருத்தேர் அண்ணாமலை, வீர ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திரர் கோவில், கண்ணப்பனார் கோவில், பழனி ஆண்டவர் கோவில், சூரிய லிங்கம், வருணலிங்கம், காசிநந்தீஸ்வரர், ஆதி அருணாசலம் அபிதகுஜாம்பாள் கோவில்,குழமணி விநாயகர், மாரியம்மன் கோவில், வாயுலிங்கம், அதிகார நந்தி, குபேரலிங்கம், இடுக்கி வழி பிள்ளையார் கோவில், பஞ்சமுக தரிசனம், சீனிவாச பெருமாள் கோவில், ஈசான்ய லிங்கம்.
ஸ்ரீபச்சையம்மன் கோவில், வடசுப்ரமணியர் கோவில், ஸ்ரீதுர்க்கையம்மன் கோவில், கட்க தீர்த்தம், துர்கா நந்தி, பெரிய ஆஞ்சநேயர் கோவில், பழகொன்று கோவில், அருணை நாயகி கோவில், பூத நாராயண கோவில், வீரபத்திரர் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில் என 54 கோவில்களை கிரிவலப்பாதையில் தரிசனம் செய்தால் அண்ணாமலையாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.