தமிழ் மந்திரங்கள் ஒலிக்க பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..விண்ணை எட்டிய அரோகரா முழக்கம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு இன்றைய தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழனி: காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டம்..எங்கும் கந்தனுக்கு அரோகரா..தண்டாயுதபாணிக்கு அரோகரா என்ற முழக்கம் பழனி எங்கும் எதிரொலிக்கிறது. வானத்தில் கருடன் வட்ட மிட..சிவாச்சாரியார்கள் பச்சைக் கொடி அசைத்த உடன் பழனி மலை முருகன் கோவில் ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் மந்திரங்கள் ஒலிக்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் குவிந்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படுவது திருஆவினன் குடி எனப்படும் பழனி. இந்த ஆலயத்தில் தினசரியும் முருகனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் நாட்களில் தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. 23ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. நேற்றைய தினம் மலைக்கோவில் மூலவர், ராஜகோபுரம், தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், பாதவிநாயகர், சேத்ரபாலர், சண்டிகாதேவி, இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுதசுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் முதலான உபதெய்வ சன்னதி விமானங்களுக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது.
இன்று அதிகாலை 8ஆம் கால யாக பூஜைகள் தொடங்கின. இந்த பூஜைகள் நிறைவடைந்து, கோபுர கலசங்கள் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வானத்தில் கருடன் வட்டமிட்ட உடன் சிவாச்சாரியார்கள் பச்சைக்கொடி அசைக்க 9 மணிக்கு ராஜகோபுரம், தங்க விமானத்தில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது.

மலைக்கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 2000 பக்தர்கள் மட்டுமே குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணி வரை குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரத்தில் 3 இடங்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரத்தில் தென்மண்டல ஐஜி தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பாபிஷேகம் முடிந்த உடன் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கும்பாபிஷேகத்தை காண காத்திருந்த பக்தர்கள் மீது 8 இடங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications