மகர ஜோதியாக பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் சபரிமலை ஐயப்பன்..ரகசியம் இதுதான்!
திருவனந்தபுரம்: மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி தினமான தை மாதம் 1ஆம் தேதி மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் வானில் தோன்றும் ஒரு புனிதமான நட்சத்திரமாகும். மற்ற நாட்களில் அது தெரியாது. சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பல மேடு இருக்கிறது. இங்கு கண்ணுக்குத் தெரியாத பொற் கோவிலில் சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும், இவர் தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் பேரொளியாய்த் தோன்றிப் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகர விளக்கு என்பது மகர சங்கராந்தி தினத்தன்று மாலை நேரத்தில் காட்டில் குடியிருந்து வரும் ஆதிவாசிகள், ஐயப்பனுக்காக பொன்னம்பல மேட்டில் காட்டும் கற்பூர ஆரத்தியாகும்.
ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14 ம் தேதி மாலை நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம்தேதி நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 90,000 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 14 ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
மகரவிளக்கை முன்னிட்டு வனத்துறையினர் ரோந்து பணி மற்றும் காட்டு தீ பரவாமல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். காட்டுத் தீயை தடுக்க மட்டும் பம்பையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. மகரவிளக்கு தரிசனம் செய்ய ஐயப்ப பக்தர்கள் கூடும் புல்லுமேடு பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மகரவிளக்கு தரிசனம் செய்யும் மையங்களில் தீயணைப்பு வீரர்கள் முன்கூட்டியே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் எருமேலி-கரிமலை சாலை மற்றும் சத்திரம்- புல்லுமேடு சாலையில் கூடுதல் தீயணைப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு பகலாக ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத்துறைக்கு சொந்தமான இரண்டு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செய்யப்பட்டு வருகிறது.
யானைகள் நடமாட்டம் கண்காணிக்க தனி குழுவும் 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் ஆபத்தான மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். ஆக்ரோஷமான பன்றிகளை பிடித்து வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு 84 காட்டுப்பன்றிகள் வேறு இடத்தில் இடம் பெயர்ந்தன. இதுவரை 120 பாம்புகள் பிடிபட்டுள்ளன. நான்கு ராஜ வெம்பால , பத்து நாகப்பாம்புகள், பத்து விரியன் பாம்புகள் மற்றும் அதிக விஷமுள்ள பாம்புகள் பிடிபட்டுள்ளன. இவைகள் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத வேறு காட்டு பகுதிக்கு மாற்றப்பட்டது.
பாத யாத்திரை ஆக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ ராபிட் ரெஸ்பான்ஸ்சிபிள் குழுவினர் தயார் நிலையில் உள்ளது. சபரிமலையில் வனக்காவலர்கள், சுற்றுச்சூழல் காவலர்கள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அதே போல நேற்று ஞாயிற்றுக்கிழமை மகரவிளக்கை முன்னிட்டு பம்பை ஆறு மற்றும் ஆற்றின் மணல்புறத்தில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
மகர ஜோதியை காணவேண்டியே, ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் கடுமையான விரத முறைகளை கடைபிடித்து வருவார்கள். இறுதியில் இருமுடி கட்டிக்கொண்டு மகர விளக்கு பூஜை தினத்தன்று சபரிமலைக்கு வந்து காத்திருப்பார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளில், காட்டுத் தேவதைகள் மற்றும் தெய்வங்களை அமைதிப்படுத்துவதற்கான குருத்தி எனும் சடங்கு நடக்கிறது.
தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி எனப்படும் நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.
வானில் இருக்கும் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில், அதிக ஒளிமயமாக இருப்பது 'ஸிரியஸ்' எனும் நட்சத்திரக் கூட்டமாகும். இவை பார்ப்பதற்கு வேடனைப் போல் இருக்கும். இந்த நட்சத்திரக் கூட்டத்தை வேத காலத்தில் ம்ருக வியாத என்று அழைத்தனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியை, ஐயப்பனின் மற்றொரு தோற்றமான வேடன் வடிவிலான ஜோதி என்றே சொல்கின்றனர்.
மகர ஜோதி, மகர விளக்கு தரிசனம் என்பது அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வாகும். பெரும்பாலானவர்கள் இரண்டையும் சேர்த்து குழப்பிக்கொள்கின்றனர். மகர விளக்கு என்பது மகர சங்கராந்தி தினமான, அதே தை 1ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், காட்டில் குடியிருந்து வரும் ஆதிவாசிகள், ஐயப்பனுக்காக பொன்னம்பல மேட்டில் காட்டும் கற்பூர ஆரத்தி என்று சிலர் கூறுகின்றனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தினத்தன்று மலையில் தீபம் ஏற்றுகின்றனரோ, அது போலவே தான், மகர விளக்கு பூஜையன்று வானில் தோன்றும் நட்சத்திரத்தை அடுத்து நடக்கும் கற்பூர ஆரத்தி என்றே சிலர் கூறுகின்றனர்.
மகரசங்கராந்தி நாளில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஒளிரும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும். பேரொளியாக ஜோதி வடிவத்தில் காட்சி தரும் ஐயப்பனை தரிசனம் செய்த உடன் பக்தர்கள் ஓம் சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி முழக்கம் எழுப்புவது அந்த விண்ணை எட்டும் அதை கேட்கும் பலருக்கும் மெய் சிலிர்க்கும்.
மகர விளக்கு நாளில் ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுகிறது. சிறப்பு அலங்காரங்காரத்தில் பந்தள ராஜாவாக தீபாரதனையில் சுவாமி ஐயப்பனைக் காண கண் கோடி வேண்டும்.