நவராத்திரி காலத்தில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..அம்மனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்
மதுரை: நவராத்திரி பண்டிகை நாட்கள் தெய்வீக வழிபாட்டிற்கு உரியது. இந்த நாட்களில் கடவுள் வழிபாடு மட்டுமே நடைபெறும். திருமணம் செய்ய மாட்டார்கள். ஒன்பது நாட்கள் கொலு வைத்து விரதம் இருந்து நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடுவார்கள். நவராத்திரி பண்டிகை காலம் முப்பெரும் தேவியரை வணங்குவதற்கான காலம். இந்த காலத்தில் நாம் மனதையும் உடலையும் தூய்மையானதாக வைத்திருக்க வேண்டும். விரதம் இருக்கும் இந்த காலத்தில் நாம் சில உணவுகளை சாப்பிடக்கூடாது. பண்டிகை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
நவராத்திரி காலத்தில் அம்மனை வணங்க சக்தியை வணங்க நமக்கு சக்தி வேண்டும். நவராத்திரி பண்டிகை காலங்களில் மந்திரங்களை உச்சரிப்பது, பூஜை செய்வது என தெய்வீக வழிபாட்டிற்கு மட்டுமே நேரத்தை செலவிட வேண்டும்.
நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் 9 நாட்களும் நாம் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
வாராஹி நவராத்திரி 2022: வளம் தரும் வாராஹி அம்மனை வணங்கினால் என்னென்ன நன்மைகள்
நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம்
நவராத்திரி பண்டிகை மகாளய அமாவாசை முடிந்து ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறோம். கலைமகள், அலைமகள், மலைமகளுக்காக ஒன்பது நாட்களும் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நாட்களில் நாம் சுத்தமாக இருந்து சில செயல்களை செய்ய வேண்டும். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது.
திருமணம் கூடாது
பொதுவாகவே புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு உரிய மாதம். பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள். மகாளய பட்சம் என முன்னோர்களுக்கு விரதம் இருப்பார்கள். மகாளய அமாவாசை முடிந்த மறுநாள் பிரதமை தொடங்கி நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகிவிடும். எனவேதான் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்து விடுகின்றனர். அந்த காலங்களில் சுப முகூர்த்தம் எதுவும் கிடையாது. இந்துக்கள் தவிர வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்கின்றனர்.
நகம், முடி வெட்ட வேண்டாம்
நவராத்திரி பண்டிகை காலத்தில் அம்மனுக்காக தினசரியும் குளித்து விட்டு சுத்தமாக வழிபாடு செய்கிறோம். அந்த கால கட்டத்தில் சில காரியங்களை செய்தால் அது துர்க்கை அம்மனை கோபப்படுத்தி விடும். இந்த முடி வெட்டுவதோ நகம் வெட்டுவதோ, ஷேவிங் செய்வதோ கூடாது. கணவன் மனைவி இடையே தாம்பத்ய உறவு கூடவே கூடாது.
சுத்தம் அவசியம்
வீட்டினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லத்தூய்மையோடு உள்ளத்தூய்மையும் அவசியம். நவராத்திரி பண்டிகை காலத்தில் வீட்டுக்கதவை பூட்டிவிட்டு வெளியே போகக்கூடாது. யாராவது ஒருவர் இருக்க வேண்டும். வீட்டில் கலசம் வைத்தால் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்கவே கூடாது.
அறிவியல் உண்மைகள்
தெய்வீக வழிபாட்டிற்கு உரிய கொண்டாட்டம் நடைபெறும் போது சிற்றின்ப ஆசைகளை தவிர்த்துவிடுவதுதான் நல்லது. விரதம் இருக்கும் காலங்களில் உடலும் மனசும் சற்றே சோர்வாக இருக்கும். இதை தவிர்க்க காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதுதான் நல்லது. மாறாக தாம்பத்ய உறவில் ஈடுபட்டால் உடல் பாதிக்கப்படும் என்பதாலேயே பலரும் திருமணம் செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.
அசைவம் சாப்பிடக்கூடாது
எலுமிச்சம் பழத்தை வெட்டக்கூடாது. எலுமிச்சை தெய்வீக வழிபாட்டுக்கு மட்டுமே உரியது. நவராத்திரி நாட்களில் பகலில் தூங்கக் கூடாது அம்மனுக்கு கோபம் வரும். வீட்டில் அசைவம் சமைக்கக் கூடாது. விரதம் இருப்பவர்கள் பழங்கள், காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.