இருமுடி தாங்கி.. ஒருமனதாகி..ஐயப்பனை காண படையெடுக்கும் பக்தர்கள்.. அன்னதானத்திற்கு குவியும் அரிசி
திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த ஒரு மாதத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பல டன் காய்கறிகள், அரிசிகள் சபரிமலை கோவில் அன்னதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 32 நாட்களில் 20,88,398 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 32 நாட்களில் 23.37 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் 20.88 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
வரலாறு காணாத கூட்டத்தால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
சபரிமலை ஐயப்பனை காண குவியும் கூட்டம்.. முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனி வரிசை
சபரிமலையில் கட்டுப்பாடு
சபரிமலையில் தினசரியும் 90 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்களுக்கு தனி வரிசை இந்த நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர் மற்றும் முதியவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நிற்பதால் சிரமப்படுவதாக புகார்கள் எழுந்தன.
தனி வரிசை அமல்
எனவே பம்பையில் தேவஸ்தான அமைச்சர் கெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தனி வரிசை ஏற்படுத்துவது என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சபரிமலை தரிசனத்திற்கு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும் முதியவர்களுக்கு இன்று முதல் தனி வரிசை அமலுக்கு வருகிறது. மேலும் தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களுக்கு பம்பையில் இருந்து நிலக்கல் செல்ல போதிய பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்னதானம்
சபரிமலை சன்னிதானத்தில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிவரும் தேவஸ்தான போர்டு நிர்வாகத்திடம் அனுமதிபெற்று அன்னதானத்திற்கு தேவைப்படும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.
50 மூட்டை அரிசி
இந்த ஆண்டு அன்னதானத்திற்கு தேவையான 50 மூட்டை அரிசி, 1000 கிலோ ரவை, 500 கிலோ கொண்டைக்கடலை, 600 கிலோ துவரம் பருப்பு, 350 கிலோ பனங்கருப்பட்டி, உளுந்தம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் தக்காளி, கேரட், பீன்ஸ்,உருளைக்கிழங்கு, பூசணி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 டன் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் ஆறு லாரிகளில் ஏற்றப்பட்டு சபரிமலை சன்னிதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மளிகைப்பொருட்கள்
அன்னதான பணியில் இணைந்து 9 ஆண்டுகளாக மளிகைப் பொருட்கள், காய்கறி வகைகளை அனுப்பி வருவதாகவும், சபரிமலை தேவஸ்தான போர்டு நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெற்று மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என மொத்தம் 40 டன் பொருட்களை தற்போது சபரிமலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், நிலக்கல் தேவசம் போர்டு,மணிகண்ட சேவா சமிதி ஆகிய இடங்களுக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
இதனிடையே சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள்,சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 90 ஆயிரத்திற்கு மேல் முன்பதிவு செய்ய முயலும் பக்தர்களின் பதிவு ஏற்கப்படாது. இதனால் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இதை யாரும் நம்ப வேண்டாம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு வழக்கம் போல் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.