திருப்பதியில் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம்.. பெரிய சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கும் மலையப்பசுவாமி
திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கும் திருமலையில் பெரிய சேஷ வாகனத்தில் இன்று மலையப்ப சுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.
கலியுக தெய்வமான சீனிவாச பெருமாளுக்கு முதலில் பிரம்ம தேவன் உற்சவத்தை நடத்தியதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். புரட்டாசி மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பனம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வசேனதிபதியை கோயில் அர்ச்சகர்கள் ஜீயர்கள் முன்னிலையில் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழுங்க கொண்டு சென்றனர்.

நவதானிய முளைப்பாரி
அங்குள்ள சுத்தமான பகுதியில் மண் எடுக்கப்பட்டு கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானிங்கள் செலுத்தி முளைகட்டும் விதமாக பூஜை செய்யப்பட்டது. இந்த அங்குரர்பணத்திற்கு சந்திரன் அதிபதியாக இருந்து சுக்லபட்ச காலத்தில் வளரும் சந்திரனை போன்று தினந்தொறும் நவதானியங்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படவுள்ளது.

பிரம்மோற்சவம் காண வரும் முக்கோடி தேவர்கள்
பிரம்மோற்சவத்திற்காக புதிய மஞ்சள் துணியில் கருடர் உருவம் வரையப்பட்ட கொடி இன்று நான்கு மாடவீதியில் உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழுங்க கருட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றமே சகல தேவதைகளையும் அஷ்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, ராக்ஷச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முக்கோடி தேவர்களும் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம்

வாகன வீதி உலா
ஆந்திர மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்படுவது வழக்கம். இந்த வழக்கத்தின்படி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநில அரசின் சார்பில் ஏழுமலையானுக்கு இன்று பட்டு வஸ்திரத்தை அளிக்க இருக்கிறார். இதனையடுத்து மாலையில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வருவார்.

அக்.1ல் கருடவாகன சேவை
நாளை காலை சின்ன சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனத்திலும் மலையப்பசாமி உலா வருவார். 29ஆம் தேதி சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகன சேவை நடைபெறும். 30ஆம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன சேவையும் நடைபெறும். அக்டோபர் 1ஆம் தேதி காலையில் மோகினி அவதாரத்தில் பல்லாக்கு உற்சவமும், இரவு கருட வாகன சேவையும் நடைபெறும்.

தங்க தேரோட்டம்
அக்டோபர் 2ஆம் தேதியன்று காலையில் ஹனுமந்த வாகனமும் மாலையில் தங்க ரத உற்சவமும் நடைபெறும். இரவு கஜவாகன சேவையும் நடைபெறும். 3ஆம் தேதியன்று சூரிய பிரபை வாகனத்திலும் மாலையில் சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்பசாமி உலா வருகிறார். 4ஆம் தேதி காலையில் பெரிய தேரோட்டம் நடைபெறும். இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் வலம் வருகிறார். 5ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

பக்தர்கள் தரிசனம்
பிரம்மோற்சவத்தை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மாற்றுதிறனாளிகள், மூத்தகுடிமக்களுக்கான தரிசனம் அனைத்து முன்னுரிமை தரிசனங்கள், ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்து ஒன்பது நாட்களுக்கு உண்டான டிக்கெட்டுகள் வழங்குவது அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இலவச தரிசனத்தில் மட்டும் இன்று முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை அனுமதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள அனுமதிக்கப்படும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications