கயல் ப்ரோமோவில் விக்ரம் கமலின் "வா பாத்துகலாம்" டயலாக்!.. சொந்தமா எழுத தெரியாதா? நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: கயல் சீரியிலில் சைத்ரா ரெட்டி பேசும் டயலாக் விக்ரம் திரைப்படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்ட நிலையில் சீரியல் இயக்குநர்களுக்கு சொந்தமாக டயலாக் எழுதக் கூட தெரியாதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
1990 களில் டிவி சீரியல் என்றால் குறைந்த வாரங்களில் முடியக் கூடியதாக இருக்கும். அதிலும் பெரும்பாலானவை நம் வாழ்வியலுடன் பின்னி பிணைந்திருக்கும். "இப்படியெல்லாமா நடக்கும்" என கேட்காத முடியாதபடி காட்சிகளும் கதைகளும் யதார்த்தமாக இருக்கும். பெரும்பாலும் சிரிக்க வைக்கும் சீரியல்களே இருந்தன. ஆனால் இன்று மெகா சீரியல் என்ற பெயரில் ஆண்டுக் கணக்கில் ஓடுகிறது. அதிலும் மக்களின் ஆதரவை வைத்து வாரந்தோறும் கதை களத்தையும் மாற்றி அமைக்கும் சூழலும் எழுந்துள்ளது.
சீரியலுக்கு டைட்டில் சாங், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் மாற்றம், ஸ்டன்ட் காட்சிகள் என சினிமாவை தொடும் அளவுக்கு டெக்னாலஜியை புகுத்துகிறார்கள். கதையை பார்த்தால் இப்படியெல்லாம் கூட நடக்குமா என நம்மை கேட்கவைக்கும். கொஞ்சமும் லாஜிக் இருக்காது. நிஜத்தில் பள்ளிகளில் நடக்கும் பாலியல் புகார்கள் குறித்து கதையை புகுத்தி டிஆர்பியை எகிற வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டில் முன்னணியில் இருந்தாலும் பள்ளியில் யாரோ ஒரு மாணவிக்கு நடக்கும் பாலியல் பிரச்சினையை தட்டி கேட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வைத்து அனைவரிடம் அப்லாஸ் வாங்குவது, ஏதோ உலகிலேயே "பாக்யலட்சுமிக்குத்தான்" தைரியமும் சமூக பொறுப்பும் இருப்பது போலும் அந்த பள்ளியில் படிக்கும் எந்த மாணவர்களின் பெற்றோருக்கும் அது இல்லாதது போலும் எடுத்திருப்பார்கள்.
பெரும்பாலும் சினிமா படங்களில் இருக்கும் காட்சிகளை சீரியலில் காப்பி அடிக்கும் சம்பவமும் நடக்கின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயல் கேரக்டரில் நடித்திருக்கும் சைத்ரா ரெட்டி ஒரு செவிலியர், ஆனால் அவரது வீட்டை பார்த்தால் ஒற்றை சம்பாதித்யக்காரர் வீடு போல் இருக்காது. வீடு தனி வீடு, வெளியே கார் பார்க்கிங் போல் இருக்கிறது.
கயலின் வீடு
உள்ளே பெரிய ஹால், சோபா செட்டும் இருக்கும். இரு படுக்கை அறை கொண்டது. தோட்டமும் பெரிதாக இருக்கும். செவிலியராக பணிபுரியும் ஒருவருக்கு என்னதான் பெரிய மருத்துவமனையாக இருந்தாலும் அவருக்கு மாதம் ரூ 20 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். இந்த ரூ 20 ஆயிரத்தில் அம்மா, இரு தங்கைகள், குடிகார அண்ணன், வேலை வெட்டிக்கு போகாத தம்பி, அண்ணனின் மனைவி, குழந்தை என இத்தனை பேருக்கு உணவு, உடை, வீட்டுச் செலவு, கரன்ட் பில், கல்விக் கட்டணம் ஆகியவற்றுக்கே போதாது. இதில் அத்தனை பெரிய வீடு என்றால் பிராக்ட்டிகலாக யோசித்தால் கூட நிச்சயம் சென்னையில் ரூ 15000 வாடகை இருக்கும்.
கயல் சீரியலில் லாஜிக் இல்லை
எனவே கயலின் வீட்டிலிருந்தே லாஜிக் இல்லாத விஷயம் ஆரம்பிக்கிறது. கயலின் தங்கைக்கு திருமணம் நடத்துகிறார்க... நடத்துகிறார்கள். யப்பா மாதக்கணக்கில் ஆகிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த கயலின் பெரியம்மாவும் பெரியப்பாவும் கங்கணம் கட்டி அலைகிறார்கள். இன்று ஒரு மணி நேர ஸ்பெஷல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கயலின் தங்கை தேவிக்கு திருமணம் நடைபெறுமா இல்லை தடங்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ப்ரோமோ
இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ நேற்று வெளியானது. அதில் கயலின் பெரியம்மா, "ஏ கயல் நீ சாமர்த்தியமா காய் நகர்த்தி இந்த கல்யாணத்தை நடத்திடுவ போலயே என்பார். அதற்கு கயல், என்னை தாண்டி இந்த கல்யாணத்தை யார் நிறுத்துகிறார்கள் என பார்க்கலாம். உடனே கயலின் பெரியப்பா, ஏ கயலு நீ எந்த விஷயம் எங்களுக்கு தெரியக் கூடாதுனு மறைச்சியோ அது எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. இதுக்கு அப்புறம்தான் என்னோட ஆட்டமே ஆரம்பம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்போது கயலின் தங்கை தேவி, அக்கா இந்த கல்யாணம் நடந்துடுமாக்கா என கேட்கிறார். அதற்கு இந்த மாதிரி நேரத்துல ஒன்னே ஒன்னுதான் சொல்லணும், வா பாத்துக்கலாம் என கூறி தங்கையை கயல் அழைத்து செல்வார்.
உறுவப்பட்ட டயலாக்
இந்த டயலாக்கை எங்கேயோ கேட்டதுமாதிரி இருக்கேனு யோசித்த போதுதான் இது விக்ரம் படத்திலிருந்து உறுவப்பட்டது என தெரிந்தது. அந்த படத்தில் "இந்த மாதிரி நேரத்துல வீரங்கல்லாம் ஒன்னு சொல்லுவாங்கன்னு விக்ரம் படத்தில் கமல் சொல்லிவிட்டு பார்த்துக்கலாம் என்பார். உடனேயே அந்த டயலாக்கை திருடி இந்த சீரியலில் இயக்குநர் சேர்த்துவிட்டதாக நெட்டிசன்கள் ப்ரோமோவில் கமென்ட் போடுகிறார்கள்.
தனித்தன்மை வேண்டும்
ஒரு டயலாக்கை சொந்தமாகக் கூட எழுத தெரியாமல் இப்படியா காப்பி அடிப்பது. படத்தில் வரும் சண்டை காட்சிகள், மற்ற காட்சிகளைத்தான் திருடுகிறார்கள் என்றால் டயலாக்கைகூடவா! இளம் இயக்குநர்களுக்கு டயலாக்கை சொந்தமாக எழுத கூட முடியாதா, மனதில் உறுதி வேண்டும் படத்திலிருந்து கண்ணின் மணியே கண்ணின் மணியே பாடலின் வரிகளை மாற்றி கயல் சீரியலுக்கு டைட்டில் சாங் போட்ட இயக்குநர், இப்படி டயலாக்கை சுடலாமா? இந்த சீரியல் என்றில்லை பல சீரியல்களில் படத்திலிருந்து பல சிசுவேஷன்களை எடுக்கிறார்கள். 1990 கள், 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சீரியல்களில் இப்படி காப்பி அடித்திருக்க மாட்டார்கள். எப்போது தனித்தன்மை என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும். காப்பி அடித்தால் உங்களின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிடும் என்பதை இளம் இயக்குநர்கள் யோசிக்க வேண்டும்.
புதுமைகள்
புதுமைகள், கிரியேட்டிவிட்டிகள் இருந்தால்தானே வசனகர்த்தாக்களும் இயக்குநர்களும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வர முடியும்! இதை மனதில் பதியவைத்து இனியாவது புதுமைகளையும் அதே நேரத்தில் கொஞ்சமாவது யதார்த்தத்தையும் புகுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். பொழுது போக்கிற்காக சீரியல்களை பார்க்கும் போது இது போன்று லாஜிக் இல்லாததால் மக்கள் சீரியல்களை வெறுக்கும் நிலை ஏற்படும் என்பதையும் மறக்க வேண்டாம்.