சிபிஎம் நிர்வாகி படுகொலை.. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 13 பேர் விடுதலை.. கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
திருவனந்தபுரம்: சிபி(ஐ)எம் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கிலிருந்து 13 ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கேரளம் எப்போதும் அரசியல் கொந்தளிப்புடன் உள்ள மாநிலமாகும். பல முன்னேற்றமான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாய் விளங்கும் கேரளத்தில் இந்த அரசியல் கொந்தளிப்பு இயல்பானதாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாநில உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபி-ஐ-எம்) கட்சியினருக்கும் பாஜகவின் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையேயான மோதல் வழக்கமான ஒன்று. இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த மோதலில் சிபி(ஐ)எம்-ன் பிரமுகர் விஷ்ணு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 13 ஆர்எஸ்எஸ் ஊழியர்களையும் குற்றவாளிகளாக உறுதி செய்தது.

வழக்கு
மட்டுமல்லாது அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கடந்த 2008ல் தீர்ப்பளித்தது. இந்நிலையில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி கே.வினோத் சந்திரன், நீதிபதி சி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இறுதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு
ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.விஜய பானு மற்றும் பி.ராமன் பிள்ளை ஆகியோர், தனது தரப்பினர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றும், அதேபோல ஆளும் கட்சி தரப்பினர் உயிரிழந்துள்ளதால் அவர்களுக்கு சாதகமாக வழக்கு விசாரிக்கப்பட்டு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் வாதாடினர். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் படுகொலை செய்யப்பட்ட நபர் தரப்பில் வழங்கப்பட்ட ஆதாரங்கள் கேள்விக்குள்ளாக்கினர்.

விடுதலை
மேலும், நேரில் பார்த்ததாக ஆஜர்படுத்தப்பட்ட சாட்சியங்கள் முன்னுக்கு பின்னாக முரணாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இந்த நீதிமன்றம் விடுவிப்பதாக தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பு வெளியானதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications