கேரளாவில் வெறும் 9 இடங்கள்தான் வித்தியாசம்.. நூலிலையில் கோட்டைவிடும் காங்.. ஏபிபி- சி வோட்டர் சர்வே
திருவனந்தபுரம்: ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கேரளாவில் இடதுசாரிகள் மீண்டும் வெற்றி பெறும் என்றாலும்கூட காங்கிரஸ் கடும் போட்டியைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்றுதான் கடைசிக்கட்ட சட்டசபை தேர்தல் முடிந்தது. வரும் மே 2ஆம் தேதி தமிழகம், கேரளா, புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அனைத்து செய்தி நிறுவனங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
Exit Poll 2021: 3 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி.. சட்டசபையில் காலடி வைக்கும் "நம்மவர்"களில் ஓரிருவர்!
வெற்றிதான் ஆனால்
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கேரளாவில் இடதுசாரிகள் 91 இடங்களில் வென்றிருந்தனர். பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி இப்போது அங்கு நடைபெறுகிறது. இந்நிலையில் நடைபெற்ற முடிந்த தேர்தலில் இடதுசாரிகள் கேரளாவில் 74 இடங்களில் வெல்லும் என ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
நெருங்கும் காங்கிரஸ்
அதேநேரம் கடந்த 47 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இந்த முறை கடும் போட்டி கொடுக்கும் என ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 65 இடங்களில் வெல்லும் என ஏபிபி- சி வோட்டர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாஜக - ஒரு இடம் தான்
முதலில் கேரளாவில் ஆட்சி அமைப்போம் என்ற முழக்கத்துடன் பாஜக களமிறங்கியது. இதற்காக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை தனது கட்சியில் இணைத்தது. இருப்பினும், கேரளாவில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தாங்கள் கேரளாவில் கிங் மேக்கராக இருப்போம் என்று பாஜக. இருப்பினும், பாஜக வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்லும் என ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் இடதுசாரிகள்
கேரளாவில் இடதுசாரிகள் மிக எளிதில் வெற்றி பெறுவார்கள் எனத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கடும் போட்டி கொடுத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதேபோல ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் இடதுசாரிகளே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.