சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு - கொரோனா தடுப்பூசி போட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
ஐப்பசி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசிய செலுத்திய பகதர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும், ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் மலையாள மாதப் பிறப்பையொட்டி மூன்று நாட்கள் திறக்கப்படுவது வழக்கம். மலையாளத்தில் துலா மாதம் என அழைக்கப்படும் ஐப்பசி மாதம் 17ஆம் தேதி பிறப்பதை முன்னிட்டு ஐயப்பன் கோவில் இன்று மாலை திறக்கப்படுகிறது. இன்று பூஜைகள் எதுவும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உபதேவதைகள் கோயில்களும் திறக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டு பூஜைகள் நடைபெறும். 18 படிகளிலும் தீபங்கள் ஏற்பட்டு பூஜைகள் நடக்கும்.

ஐப்பசி 1ஆம் தேதி அக்டோபர் 17 முதல், 21ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி உஷா பூஜை முடிந்தபின், சபரிமலை மேல்சாந்தி மற்றும் மாலிக்காபுரம் கோயில் மேல்சாந்தி ஆகியோர் தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கும். இதன்படி, பந்தளம் அரண்மனையில் குலுக்குச் சீட்டு போடப்படும். இதில் மேல்சாந்தியாக அடுத்துவருவோர் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.
10வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகள் அந்த சீட்டை தேர்வு செய்து நிர்வாகத்திடம் வழங்குவர். அதில் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயரில் உள்ளவர்களே மேல்சாந்தியாக அடுத்த ஓர் ஆண்டுக்கு அறிவிக்கப்படுவர். வரும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன் லைன் முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்கள், முறையான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டல்களுடன்தான் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும், ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டு வர வேண்டும். இந்த 5 நாட்களிலும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, கலபா அபிஷேகம், படிபூஜை, புஷ்பா அபிஷேகம் ஆகியவை நடைபெறும். அக்டோபர் 21ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு நடை சாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications