'சாமியே சரணம் ஐயப்பா' கோஷம் விண்ணை அதிர மகரஜோதியை தரிசித்த பக்தர்கள்! அரூபமாக காட்சியளித்த ஐயப்பன்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 'சாமியே சரணம் ஐயப்பா' முழக்கம் விண்ணை அதிர மரகஜோதியை பக்தர்கள் தரிசித்தனர். மரகஜோதியை தரிசிக்க சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நேற்று முதல் பெருவழிப்பாதை, வண்டிப்பெரியார் உள்ளிட்ட மலைப்பாதைகளில் முகாமிட்டு தங்கியிருந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வனப்பகுதியில் தங்கியிருந்த பக்தர்கள் கண் குளிர மகர ஜோதியை தரிசித்தனர்.
ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதியன்று சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடத்தப்படும். அதாவது கேரள மக்களின் வழக்கப்படி இந்த தேதியில்தான் மகர சங்கராந்தி மாதம் தொடங்குகிறது. எனவே மாதத்தின் முதல் நாளில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவார் என்பது ஐதீகம். புராணங்களின்படி, ஐயப்பன் பந்தளம் ராஜ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் அவர் அதனை விரும்பாமல் சபரிமலைக்கு வந்துவிட்டார்.
ஐயப்பனை காண அவரது தந்தையான பந்தளம் மகாராஜா ஆண்டுக்கு ஒருமுறை சபரிமலைக்கு வருவார். அதுவும் மகர சங்கராந்தியின் முதல் நாளான ஜனவரி 14ம் தேதியன்றுதான் வருவார். இப்படி வரும் அவர் கூடவே ஐயப்பனின் ஆபரணங்களையும் கொண்டு வருவார். பந்தளம் அரண்மனையிலிருந்து புறப்படும் ஆபரணங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் சபரிமலைக்கு வந்தடையும்.
பந்தளத்தில் இருந்து சபரிமலை நோக்கி புறப்படும் திருவாபரணம்..கூடவே வரும் கருடன்..மெய்சிலிர்க்கும்
ஆபரணங்கள்
இந்த ஆபரணங்கள் 18 படிகளை கடந்து சன்னிதானத்தை வந்து சேரும். இதனையடுத்து ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். ஐயப்பன் ராஜ குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் ஐயப்பனை அடிக்கடி சென்று தரிசிக்க மாட்டார்கள். இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சபரிமலைக்கு வருவார்கள். ஏனெனில் சபரிமலையில் ஐயப்பன் தியான கோலத்தில் இருப்பதால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை பார்த்தால் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக தன்னை அடிக்கடி சந்திக்க வரவேண்டாம் என்றும் ஐயப்பன் கூறியிருப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை
எனவே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பந்தளம் ராஜ குடும்பத்தினர் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் நேற்று பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட ஆபரணப்பெட்டி இன்று மாலை சபரிமலையை வந்தடைந்தது. ஆபரண அலங்காரங்களுக்கு பின்னர் ஐயப்பன் ஜோதி வடிவில் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். ஐயப்பனின் தரிசனத்திற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மலைப்பாதையில் தங்கியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'சாமியே சரணம் ஐயப்பா' முழக்கமிட்டுள்ளனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியானது பெருவழிப்பாதை, வண்டிப்பெரியார் பாதை ஆகிய இடங்களிலிருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் என்பால் இந்த பகுதிகளில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.
குடிசை
மாலையில் சூரியன் மறைந்த பின்னர் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகரஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியும், மகர ஒளியும் வெவ்வேறு என்று சொல்லப்படுகிறது. மகர ஜோதி பொன்னம்பல மேட்டில் உள்ள பழங்குடியின மக்களால் ஐயப்பனை தரிசிக்க காலம் காலமாக ஏற்றப்பட்டு வருவதாகவும், ஆனால் மகர ஒளி என்பது மகர சங்கராந்தி தினத்தன்று பொன்னம்பல மேட்டின் உச்சியில் தெரியும் ஒரு நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. மகரஜோதியை சபரிமலையில் 9 இடங்களிலிருந்து காண முடியும். ஆனாலும் சன்னிதானத்திலிருந்தே அதிக அளவிலான பக்தர்கள் மகரஜோதியை தரிசித்தனர்.
அறிவுறுத்தல்
அதேபோல மகரஜோதியை தரிசித்துவிட்டு கீழிறங்கும் பக்தர்கள் மற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது எனவும், முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் சபரிமலை தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. மகரஜோதி தரிசனம் முடிவடைந்த நிலையில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற தொடங்கியுள்ளது. இன்று காலை 3.30 மணிக்கு திறக்கப்பட்ட சன்னிதானம் இன்றிரவு 11.30 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.