முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் செய்த முன்னாள் MLA.. காத்திருந்து தூக்கிய போலீஸ் - 14 நாள் ரிமாண்ட்!
திருவனந்தபுரம் : மத வெறுப்பு பேச்சு வழக்கில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் நிபந்தனைகளை மீறி, தொடர்ந்து பி.சி.ஜார்ஜ் மத வெறுப்பு கருத்துகளை பேசி வருவதாக போலீசார் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த 4 ரோட்டில் ஒன்றை சூஸ் பண்ணுங்க.. ஒரு நிமிடத்தில் உங்கள் கேரக்டரை சொல்லிவிட முடியும்! ரெடியா?
இதையடுத்து அவரது ஜாமீனை ரத்து செய்தது நீதிமன்றம். இந்நிலையில் இன்று பி.சி.ஜார்ஜை 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிசி ஜார்ஜ்
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் கேரள முதல்வராக உள்ளார். கேரளாவில் பூஞ்சார் தொகுதியின் முன்னாள் சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அனந்தபுரி இந்து மகா சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
முஸ்லிம்கள் சதி
அந்த விழாவில் பி.சி.ஜார்ஜ் பேசுகையில், முஸ்லிம்கள் நடத்தும் ஹோட்டல்களில் இந்துக்கள் யாரும் சாப்பிட வேண்டாம். அங்கு ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் வகையிலான பொருட்கள் தூவிய டீ விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்துக்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக இப்படிச் செய்கின்றனர் எனக் கூறினார். இந்தப் பேச்சால் கேரளாவில் அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.
வழக்குப்பதிவு
முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜின் சர்ச்சைக்குரிய பேச்சால் திருவனந்தபுரம் நகரின் கோட்டை காவல் நிலைய போலீசார் தாமாக முன்வந்து அவர் மீது மத வெறுப்பு பேச்சு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மீண்டும் வெறுப்பு பேச்சு
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்தின் வெண்ணலா பகுதியில், மகாதேவ கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மீண்டும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ஜார்ஜ் பேசியுள்ளார். இதையடுத்து போலீசார் கடந்த 10ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு கேரள ஐகோர்ட்டில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் விதிமீறல்
இதையடுத்து, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சில் ஜாமீன் பெற்ற ஜார்ஜ், ஜாமீன் நிபந்தனைகளை மீறி விட்டார் என மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்ற காவல்
பி.சி.ஜார்ஜ் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஜார்ஜ் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை விசாரணைக் காவலில் எடுக்க போலீசார் அனுமதி கேட்டுள்ளனர்.