கேரளாவில் கொரோனாவை விட விஸ்வரூபமெடுக்கும் தங்கக்கடத்தல் வழக்கு... தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவை விட முதல்வர் பினராயி விஜயனுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருவது நாடு முழுவதும் தொடர்ந்து பேசும் பொருளாகி விட்ட கேரள தங்கக் கடத்தல் வழக்கு.
இந்த வழக்கு தொடர்பாக சட்டமன்ற சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பபட்டிருந்த நிலையில், முதல்வருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக வரும் தகவல்கள் பினராயி விஜயனுக்கு கூடுதல் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தங்க கடத்தல் வழக்கு உச்சத்தில் இருந்தபோதிலும் சில மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
கேரள சட்டமன்ற தேர்தல்
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா ஒருபக்கம் அச்சுறுத்தி வரும் நிலையில், மற்றொரு பக்கம் சட்டமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு ஆளும் கட்சியான இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. கேரளாவில் காங்கிரசும், இடதுசாரி அணியினரும் மாறி, மாறி ஆட்சியை பிடித்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைப்பதில் முதல்வர் பினராயி விஜயன் அரசு தீவிரமாக உள்ளது.
பரபரப்பை தங்கக் கடத்தல் வழக்கு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கொரோனாவை அடக்கி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் கேரளாவில் மட்டும் கொரோனா ஆட்டம் போட்டு வருவது மாநில அரசுக்கு கவலையை ஏற்படுத்தி வந்தது. ஆனால் தற்போது கொரோனாவை விட முதல்வர் பினராயி விஜயனுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருவது நாடு முழுவதும் தொடர்ந்து பேசும் பொருளாகி விட்ட கேரள தங்கக் கடத்தல் வழக்கு.
முதல்வரின் முதன்மைச் செயலாளர் கைது
கடந்த ஆண்டு ஜூலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில், கேரளாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் துபாயில் இருந்து சரக்கு விமானம் மூலம் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம் மாதம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டது இந்த வழக்கு நாடு முழுவதும் பேசுவதற்கு காரணமாக அமைந்தது.
பினராயி விஜயனுக்கு தொடர்பு?
இந்த வழக்கை சுங்கத்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தனித்தனியாக விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் திரைப்படம்போல் தினமும் புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த தங்க கடத்தலுடன் வெளிநாட்டு பணம் கடத்தலும் நடந்துள்ளது தெரியவந்துள்ளதால் அது தொடர்பாக தனியாக விசாரணை நடந்து வருகிறது. இந்த தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.
ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், பினராயி விஜயன் மற்றும் கேரள சட்டமன்ற சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோரின் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டது என விசாரணையில் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சட்டமன்ற சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பபட்டிருந்த நிலையில், முதல்வருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக வரும் தகவல்கள் பினராயி விஜயனுக்கு கூடுதல் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அரசுக்கு சாதகம்
இந்த தங்கக் கடத்தல் வழக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி. சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி அதிரி, புதிரி வெற்றி பெற்றது. பாஜக வாழ்நாளில் மறக்க முடியாத தோல்வியை சந்தித்தது. தங்க கடத்தல் வழக்கு உச்சத்தில் இருந்தது. இருந்தபோதிலும் ஆளுங்கட்சி வெற்றி பெற்றது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சபரிமலை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஆளுங்கட்சிக்கு எதிராக வேலை செய்யவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
மக்கள் மீதான விஜயனின் நம்பிக்கை
இந்த டெக்னிக் வேலை செய்யாததால் தற்போது விசாரணை அமைப்புகளை வைத்து பாஜக இந்த வழக்கை மீண்டும் தூண்டி விட்டுள்ளதாக ஆளுங்கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. காங்கிரசும் இந்த விவகாரத்தில் பாஜக பக்கம் நிற்கிறது. உள்ளாட்சி தேர்தல் சாதகமான முடிவை அளித்ததால் சட்டமன்ற தேர்தலில் சேட்டன்கள் நம் பக்கம்தான் நிற்பார்கள் என்று பினராயி விஜயன் உறுதியாக நம்புகிறார்.
பாஜக அதிசயம் நிகழ்த்துமா?
எப்படியாவது இந்த வழக்கை அரசுக்கு எதிராக திருப்ப வேண்டும், மக்கள் நம் மீது திரும்ப வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இந்த வழக்கில் தேர்தலுக்குள் நடைபெறும் மாற்றங்களை வைத்தே ஆளும் கட்சியின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த தடையெல்லாம் தாண்டி பினராயி விஜயன் ஆட்சியை தக்க வைப்பாரா? காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? பாஜக ஏதும் அதியசம் நிகழ்த்துமா> என்பது மே 2-ம் தேதி தெரிந்து விடும்.