கேரளாவில் மின்னல் வேகத்தில் கொரோனா.. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் மிக வேகமாகப் பரவி வருகிறது. புதிய உச்சத்தை நோக்கி நோய் பரவல் சென்று கொண்டிருக்கிறது.
கேரளாவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று காலை வெளியான அறிக்கையின்படி 3.17 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 28,000-த்தை கடந்து அதிகரித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தி முடித்த கையோடு.. அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா! வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை
கொரோனா
இந்நிலையில் இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கேரளா
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று மிக அதிகமாகப் பரவி வருகிறது. கேரளாவில் புதிதாக 40 ஆயிரம் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் 37.17 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் புதிதாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வந்தபோதிலும், 3.2 விழுக்காடு அளவுக்கே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி எடுத்துக்கொண்டதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
ஒமிக்ரான்
அதே நேரம் கேரளாவில் ஒமிக்ரானால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 54 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
புதிய உச்சம்
கேரளாவில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா பரவல் உச்சம் தொட வாய்ப்பு உள்ளதாக சுகாதார துறையினர் கணித்துள்ளனர். கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், '' கேரளாவில் கொரோனாவின் 3-வது அலை பரவல் மிகவேகமாக உள்ளது. இதனால் அடுத்த 3 வாரங்களில் இதன் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் உயரும்'' என்று தெரிவித்துள்ளார்.