அதிர்ச்சி! பரோட்டோ பார்சலில் கிடந்த பாம்பு தோல்! ஷவர்மா சர்ச்சைக்கு இடையே கேரளாவில் அலட்சியம்
திருவனந்தபுரம்: கேரளா காசர்கோடு மாவட்டத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஓட்டலில் வாங்கிய பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஓட்டலுக்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கேரளா காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் பகுதியில் உள்ள பேக்கரியில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி தேவாநந்தா பலியானார். மேலும், 40க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களிலும் சிக்கன் ஷவர்மா ஓட்டல்களில் உள்ளாட்சி அமைப்பினரும், உணவுத்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சோதனை
திருப்பூர், காஞ்சிபுரம், மதுரை, ,திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் பிரவீன், பரிமலேஸ்வரன், மணிகண்டன் ஆகியோர் ஷவர்மா சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரோட்டோ பார்சலில் பாம்பு தோல்
இந்த ஷவர்மா தொடர்பான பிரச்சனை அடங்குவதற்குள் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலில் வாங்கிய பரோட்டோ பார்சலில் பாம்பு தோல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி விபரம் வருமாறு:

மீண்டும் கேரளா
கேரளா தலைநகர் திருவனந்தபுரம் பக்கத்தில் உள்ள நெடுமங்காடு அருகே செல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் நெடுமங்காடு சாந்தமுக்கில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கினார். அதனை வீட்டுக்கு கொண்டு வந்து மகளுக்கு சாப்பிட வழங்கினார். பார்சலை அவிழ்த்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பார்சல் கட்டி இருந்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்தது.

ஓட்டலில் விசாரணை
இதுபற்றி உடனடியாக நெடுமங்காடு போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து புரோட்டா பார்சலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். புரோட்டா பார்சலில் இருந்தது பாம்பு தோல் தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து பார்சல் செய்த ஓட்டலுக்கு சென்று அவர்கள் விசாரணை நடத்தினர்.
Recommended Video

ஓட்டலுக்கு சீல்
அப்போது அந்த ஓட்டல் உணவுத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெற்று முறையாக இயங்குவது தெரியவந்தது. இருப்பினும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறைபாடு, உணவு பொருட்கள் வினியோகிப்பதில் அலட்சியம், ஓட்டலில் பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்றவில்லை என கூறி ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications