இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்.. 'நானும் இந்துதான்'.. கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பேச்சு
உத்தரப் பிரதேச முதலமைச்சர், விஎச்பி தலைவர் ஆகியோர் பாஜகவின் கொள்கைகளை பிரதிபலிக்கும் நிலையில், ஆளுநரும் இதே போல பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள் என்று அழைக்கப்பட தகுதியுடையவர்கள் என்றும், அந்த வகையில் தன்னையும் இந்து என அழைக்குமாறும் கேரள ஆளுநர் 'ஆரிப் முகமது கான்' கூறியுள்ளார்.
சமீபத்தில் 'கேரள ஹிந்துஸ் ஆஃப் நார்த் அமெரிக்கா' (KHNA) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் சீர்திருத்தவாதியும் கல்வியாளருமான சர் சையத் அகமது கான் தான் இந்து என்று அழைக்கப்பட வேண்டும் என்று ஒருமுறை விரும்பியிருக்கிறார். ஆனால் ஆர்ய சமாஜ்ய உறுப்பினரான நீங்கள் ஏன் என்னை இந்து என்று அழைக்கவில்லை?
நீங்கள் என்னை இந்து என அழைக்க வேண்டும். இந்து என்ற சொல்லை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான சொல்லாக கருதவில்லை. இந்து என்பது புவியியல் சொல். இந்தியாவில் வாழ்பவர்கள், இந்நாட்டின் நதியிலிருந்து நீரை குடிப்பவர்கள், இந்நாட்டில் விளையும் உணவை உட்கொள்பவர்கள் எவரும் தங்களை இந்து என்று அழைத்துக்கொள்ள தகுதியுடையவர்களாவார்கள். எனவே என்னையும் நீங்கள் இந்து என்று அழைக்க வேண்டும்" என்று ஆரிப் முகமதுகான் கூறியுள்ளார்.
தேர்வு நெருங்குகிறது.. ஹிஜாப் அணிய அனுமதி கொடுங்கள் - உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மனு
ஆதரவு
கேரளாவில் ஆளுநர் தனது பொறுப்புகளை மீறி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரமுகராக செயல்படுவதாக ஆளும் சிபிஎம் தொடர்ந்து விமர்சனம் வைத்து வரும் நிலையில் ஆளுநரிடமிருந்து இக்கருத்து வெளிவந்துள்ளது. ஆளுநரின் இக்கருத்துக்கு மத்திய அமைச்சர் வி. முரளிதரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "நான் ஒரு இந்து என்று கூறுவதே தவறு என்கிற அளவுக்கு மாநிலத்தில் சதி நடக்கிறது. சுதந்திரத்திற்கு முன்னரே சனாதனத்தை ஏற்றுக்கொண்ட மன்னர்களும், ஆட்சியாளர்களும் அனைத்து மத குழுக்களையும் இரு கரங்களுடன் ஏற்றுக்கொண்டனர்" என்றும் கூறியுள்ளார்.
எதிர்ப்பு
ஆனால் இவர்களின் கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்தவண்ணம் இருக்கிறது. கேரள சாகித்ய அகாடெமி தலைவரும் கவிஞருமான சச்சிதானந்தன் KHNA ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கருத்துக்களையும், ஆட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், சனாதனம் என்பது ஒருவகை மூடநம்பிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 'சனாதன தர்மம்' இந்தியாவின் தேசிய மதம் என்று கூறியிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆளுநர்
அதாவது ராஜஸ்தான் கோயிலின் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றிருந்த அவர் இவ்வாறு கூறியிருந்தார். அவர் பேசியதாவது, "அயோத்தி ராமர் கோயில் போன்று நாட்டின் எந்த மூலையில் நம்முடைய கோயில்கள் இழிவுப்படுத்தப்பட்டிருந்தாலும் அது மீட்டெடுக்கப்படும். சனாதன தர்மம்தான் இந்தியாவின் தேசிய மதம். இதனை ஒவ்வொரு குடிமகனும் மதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதேபோல நாடு முழுவதும் ராமராஜ்ஜியத்தை கொண்டு வரவேண்டும் என விஎச்பி தலைவர் பிரவீன் தொகாடியா நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். பாஜவினர் இந்து மதம், சனாதனம் குறித்த பேசுவது இயல்பாக இருந்தாலும், ஆளுநர் இவ்வாறு பேசியிருப்பது கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் விவகாரத்தில்
இதற்கு முன்னரும் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய போது, இவர் கூறியிருந்த கருத்துக்கள் விமர்சனங்களை உருவாக்கியிருந்தன. "இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குரானில் ஹிஜாப் குறித்து ஒரு சில இடங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஹிஜாப்தான் பெண்களின் உடை நடைமுறையென இந்நூல் கூறவில்லை. எனவே ஹிஜாப் விவகாரம் என்பது சர்ச்சையல்ல அது இஸ்லாமிய பெண்களின் கல்வியை தடுக்க நடைபெறும் சதி" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.