அடங்காத கேரளா ஆளுநர் ஆரிப் கான்.. பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து தூக்க பினராயி அமைச்சரவை ஒப்புதல்!
திருவனந்தபுரம்: கேரளா ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வகித்து வரும் பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவியை பறிக்கும் வகையிலான சட்டத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகம், கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம் என பாஜக அல்லாத மாநிலங்களில் மத்திய அரசின் பிரநிதிகளாக செயல்படும் ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல்படுவதால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக நிழல் அரசாங்கத்தை அல்லது போட்டி அரசாங்கத்தை பாஜக சார்பு ஆளுநர்கள் நடத்துவதால் மாநில நிர்வாகங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒரே டிக்கெட்.. பஸ், ரயில்களில் பயணம்.. சென்னையில் ஒரு புதுமைத் திட்டம்! வேகம் காட்டும் ஸ்டாலின்!
தமிழக ஆளுநர் ரவி
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியோ, இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறார். அத்துடன் வலதுசாரி சித்தாந்தத்தை விதைக்கும் வகையில் பல்வேறு இந்துத்துவா கருத்துகளை தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் பேசி வருகிறார். இதனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் உரத்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறது. முன்னதாக தமிழகத்தில் பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து பறிக்கும் மசோதாவும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்கம், தெலுங்கானா
மேற்கு வங்கத்தில் இப்போதைய துணை ஜனாதிபதி தன்கர், ஆளுநராக பதவி வகித்த போது மாநில முதல்வர் மமதா பானர்ஜியுடன் பகிரங்கமாக மல்லுக்கட்டினார். ஆளுநராக இருந்த தன்கர்- மமதா இடையே மோதல் பல முறை சர்ச்சையானது. ஆகையால் மேற்கு வங்க மாநில சட்டசபையும், பல்கலைக் கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாவை நிறைவேற்றியது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை மீதான அதிருப்தியால் சட்டசபை கூட்டத்தில் உரையாற்ற கூட முதல்வர் கேசிஆர் அவரை அழைக்கவில்லை.
கேரளாவில் ஆளுநரின் உச்சகட்ட ஆட்டம்
இதேபோல் கேரளாவிலும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடடதுசாரி அரசுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கேரளாவில் பத்திரிகை நிறுவனங்களை கெட் அவுட் என சொல்லி சர்ச்சையில் சிக்கினார் ஆரிப் முகமது கான். கேரளா ஆளுநரை பதவி நீக்கம் செய்தாக வேண்டும் என பிரம்மாண்டமான பேரணியை நடத்துகிறது இடதுசாரி அரசு. இதில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும் பங்கேற்க உள்ளது.
ஆளுநருக்கு எதிராக அதிரடி மசோதா
இந்நிலையில் ஆரிப் முகமது கானுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையாக, பல்கலைக் கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாவுக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆரிப் முகமது கான், எனக்கு எதிரான மசோதாவை நான் தீர்மானிக்க முடியாது; ஆகையால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவிடுவேன் என கூறியுள்ளார்.