இறுகும் பிடி! நடிகை பலாத்காரம்.. போலீசை கொல்ல சதி! திலீப் மனுவை தள்ளுபடி செய்த கேரள நீதிமன்றம்!
திருவனந்தபுரம் : கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்த போலீசாரையே கொலை செய்ய திட்டம் தீட்டியதாக சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரபல நடிகை ஒருவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் மிகவும் பிஸியாக இருந்த அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பு முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிய போது மர்ம கும்பலால் காரிலேயே வைத்து கடத்தப்பட்டார்.
விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு.. 4 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் - பழுதான போலீஸ் வாகனம்
கேரளா நடிகை
நடிகையை கடத்தியது மட்டுமல்லாமல் அவரை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனை வீடியோ எடுத்ததாகவும் புகார் எழுந்தது. தமிழகம் கேரளா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை கடத்த திட்டம் தீட்டி அதோடு அதனை வீடியோ எடுத்து தனக்கு அனுப்புமாறு கடத்தல் கும்பலை ஏவியதாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
நடிகர் திலீப்
சுமார் 80 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் வெளியே வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கேரளா குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் பைஜு பவுலோஸ் என்பவர் விசாரணைக் குழுவின் அதிகாரியாக இருந்தார். நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கொச்சி அங்கமாலி குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
போலீசாருக்கு மிரட்டல்
இந்த வழக்கு தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளை நடிகர் திலீப் மிரட்டியதாகவும் அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மலையாளத்தில் மிகப் பிரபலமான இயக்குனர் பாலச்சந்தர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அதிரடி தகவலை வெளியிட்டார். இதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்த நிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கொச்சி சைபர் கிரைம் போலீசார் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
வழக்குப் பதிவு
இதில் திலீப், அவரது சகோதரர், மைத்துனர் உள்ளிட்ட 6 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தன் மீது சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் திலிப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தன் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யானது என்றும் இந்த வழக்கை ரத்து செய்யாவிட்டால் இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் அவர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆவணங்கள் சமர்பிப்பு
இந்த மனு மீதான விசாரணை இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சைபர் கிரைம் போலீசார் சார்பிலும் அரசு சார்பிலும் கடும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன அதில் நடிகர் திலீப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன என்றும் விரிவான விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நடிகர் திலீப்பின் மொபைலிலிருந்து ஹேக்கர் சாய் என்பவர் கைப்பற்றிய திலீப் நடத்திய உரையாடல்கள், புகைப்படங்கள், உள்ளிட்ட 10 ஆவணங்களை போலீசார் சமர்ப்பித்தனர்.
திலீபின் மனு தள்ளுபடி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நடிகர் திலீப் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியது மற்றும் கொலை செய்ய திட்டமிட்டது குறித்து போதிய ஆதாரங்கள் இருப்பதால் இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து நடத்தலாம் என கூறியும், நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.