கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா. உடல் தமிழக அரசு மரியாதையுடன் தகனம்
திருநெல்வேலி: மறைந்த கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று போற்றப்படும் கி.ரா என்ற கி. ராஜநாராயணின் உடல் திருநெல்வேலி மாவட்டம் இடைச்செவல் கிராமத்தில் தமிழக அரசின் முழு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது.
கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா., தமது இறுதி நாட்களில் புதுச்சேரியில் வாழ்ந்து வந்தார். 99வயதை எட்டிய கி.ரா., வயது மூப்பின் காரணமாக புதுவையில் நேற்று காலமானார்.
இடைச்செவல் கிராமத்தில்..
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கி.ரா. உடலுக்கு இறுது மரியாதை செலுத்தினர். இதனையடுத்து கி.ரா.வின் சொந்த ஊராக தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் இடைச்செவல் கிராமத்துக்கு அவரது உடல் கொண்டு எடுத்துச் செல்லப்பட்டது.
கி.ரா.வுக்கு இறுதி மரியாதை
இன்று இடைச்செவல் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த கி.ரா. உடலுக்கு திமுக எம்.பி. கனிமொழி, மதிமுக பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை வையாபுரி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் கி.ரா.வின் உடல் வீட்டில் இருந்து அரசு மரியாதையுடன் அவரது குடும்ப மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அரசு மரியாதையுடன் தகனம்
அங்கு தமிழக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழக அரசின் முழு மரியாதையுடன் கி.ரா. எனும் கி. ராஜநாராயணன் உடல் தகனம் செய்யப்பட்டது.
கோவில்பட்டியில் சிலை..
தமிழகத்தில் சமகால எழுத்தாளர் ஒருவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. மேலும் கி.ரா நினைவாக கோவில்பட்டியில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.