IT இளைஞர்கள் 'இதையும்' செய்வார்கள்
- கி.சண்முகவடிவுஐ.டி. இளைஞர்கள் அதிக பணம் சம்பாதிப்பவர்கள்; பெற்றோரை விட்டுவிட்டு தூரதேசம் போவார்கள்; டிஸ்கோதே போவார்கள்; துரித உணவு சாப்பிட்டு அதிர் இசை கேட்பவர்கள்; விலைவாசி ஏறிப்போக அவர்களெல்லாம் அதிகச் சம்பளம் வாங்குவதே காரணம்.... போன்ற பச்சைக் கண்ணாடிப் புலம்பல்களுக்கு அப்பாற்பட்டு ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கும் இளைஞர் படை ஒன்று இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் இழப்புகளுக்கெல்லாம் ஆணிவேராகிய அறியாமையைக் களைவதே நிரந்தரத் தீர்வென்று கருதும் இவர்களது நோக்கம் பின்தங்கிய கிரமங்களில் பயிலும் மணவர்களே. இருப்பினும் பள்ளிக்கு வராத,வர இயலாத மாணவர்களிடமும் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள்.
யார் இவர்கள்?:
இந்தியச்சுடர், தோழன், ட்ரீம் இந்தியா, இந்தியாவிஷன் 2020, உதவும் மனங்கள், ஹெல்பிங் மைன்ட்ஸ், விடியல்.... இவையெல்லாம் கவித்துவமான ஒரு இலட்சியத்தோடு இயங்கும் இளைஞர் தன்னார்வ சேவை அமைப்புகள். இந்திய அரசால் தணிக்கை செய்யப்படும் சேவை நிறுவனங்கள்.
இந்த தூய சேவையில் ஐ.டி. இளைஞர்களுடன் பிற துறை இளைஞர்களும், ஆசிரியர்களும் இணைந்துள்ளனர்.
இந்த ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாகவும் தங்களுக்குள் இணைந்தும் கல்விப்பணிகளைச் செய்து வருகின்றன. இந்நிறுவனங்கள் தங்களுக்கு வரும் விண்ணப்பங்கள், வேண்டுதல்கள் மற்றும் செய்திகளை இ-மெயிலில் பகிர்ந்து, உறுப்பினர்கள் மூலம் உதவிகள் தேவைப்படும் இடங்களையும், நபர்களையும் நேரில் சென்று ஆய்ந்து தேவைகளை உணர்ந்து அதை உடனே பூர்த்தி செய்கின்றன.
அனாதை இல்லங்களுக்கு உணவளிப்பது மட்டும் தேசத்தை நேராக்கிவிடும் நிரந்தரத் தீர்வாகிவிடாது. ஒரு வேளை உணவுக்கு மீன் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே நிரந்தரத் தீர்வு என்ற தெளிவு இவர்களது செயல்பாடுகளில் தென்படுகிறது.
மிக நலிவுற்ற அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து அவை வளம்பெற அனைத்து உதவிகளையும் செய்கின்றனர். வறுமையால் மேற்கல்வி பயில இயலாத மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு முழு உதவி செய்கின்றனர். ஏழை மாணவர்களுக்கு சீருடைகளைத் தைத்து வழங்குகின்றனர். ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை அமர்த்தி ஊதியம் அளிக்கிறார்கள். கிராமப்புற பள்ளிகளில் நூலகம் அமைத்தல், இலவச கணிப்பொறி மையங்கள், சிறப்பு டியூசன் சென்டர்கள், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என பல்வேறு கல்விப் பணிகளைச் செய்துவருகின்றனர்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகப் பணி புரியும் இவர்கள் வார இறுதி நாட்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்விப்பாதை வழிகாட்டுதல், போட்டித் தேர்வினை எதிர்கொள்ள திறனாய்வுத் தேர்வு, வினாடி-வினா நடத்துதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தாமே முன் நின்று நடத்தி ஊக்கப்படுத்துகின்றனர்.
மேலும் செய்த ப்ராஜெக்ட்கள் பற்றிய நிலவரம், செலவுகள், பயன்படுகிற விதம் மற்றும் மாணவர்களின் தேர்ச்சி விவரம் என அனைத்தையும் இ-மெயில் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அட! நல்ல விஷயமாச்சே! இவர்களுடன் இணைந்து பணியாற்ற சேவை மனப்பான்மை கொண்ட நல்ல உள்ளங்களை எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய நிதியுதவியையோ , சிந்தனைகளையோ சிறிது நேர உழைப்பையோ அளித்து நாமும் உதவலாமே!
"வளமான கல்வியினால் வலிமையான பாரதம்"
( இந்தியா சுடரின் செயலாக்கத்தினைப் பற்றி நம் தட்ஸ்தமிழில் ஏற்கெனவே செய்தி வெளியகியுள்ளது.
அதன் விவரம்: தட்ஸ்தமிழ்' - இந்தியா சுடர் உதவியால் கல்வித் தடை நீங்கிய கரூர் பள்ளி! )