For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதியமான் கோட்டையில் ரூ. 1.15 கோடியில் அதியமான் கோட்டம்

By Sridhar L
Google Oneindia Tamil News

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில், ரூ. 1.15 கோடி செலவில் அதியமான் கோட்டம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

விழாவுக்கு செய்திதுறை அமைச்சரும், தி.மு.க.துணை பொதுசெயலாளருமான பரிதி இளம்வழுதி தலைமை தாங்கினார். பாமக எம்.பி. செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதா வரவேற்றார்.

விழாவில் நிதி அமைச்சரும், தி.மு.க பொது செயலாளருமான அன்பழகன் கலந்துகொண்டு வள்ளல் அதியமான் கோட்டத்தை திறந்து வைத்து பேசினார்.

அன்பழகன் நிகழ்ச்சியில் பேசுகையில்,

அதியமான் கோட்டம் இன்று இங்கு கட்டப்பட்டு உள்ளது. தர்மபுரிக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும். அதியமான் நெடுமான் அஞ்சியைத் தேடி அவ்வையார் வந்தார். வேறு பல காரணங்களினால் 2 நாட்கள் அவரைப் பார்க்கவில்லை.

அதனால், நான் ஒரு புலவன். இன்னும் என்னை அவர் பார்க்கவில்லை. எனவே நான் புறப்பட்டுச் செல்கிறேன் என அவையில் கூறினார். அவர் புறப்படுகிறேன் என்று கூறியவுடன் அதியமான் உடனடியாக அவ்வையை சந்தித்தார்.

அவரைப் போற்றி மதித்து நீண்ட நாள் வாழும் அரிய நெல்லிக் கனியை அவர் உண்பதற்காக தந்தார். அந்த நெல்லிக்கனி சாதாரணமான நெல்லிக்கனி அல்ல. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கனிதரும் அரியவகையானது.

இதை உண்டால் அதிக நாள் உயிர் வாழலாம் என அறிந்த அதியமான், தான் உண்டு வாழ்வதைவிட அவ்வை நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு வழங்கினார். மேலும் அதை வழங்கும் போது அந்த நெல்லிக் கனியின் அருமை பெருமைகளைக் கூட கூறவில்லை.

கருணாநிதி ஆட்சியில் தான் வள்ளுவர் கோட்டம் உள்பட பல கோட்டங்கள் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டது.

இதெல்லாம் தமிழகம் என்பது பழம்பெரு தமிழகம் என்பதை எடுத்துக் கூறுவதாக உள்ளது. இங்கு பல பேர் கோரிக்கைகள் வைத்தனர். அவர்களுடைய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். இந்த முறை நிறைவேற்றப்படாவிட்டாலும் 6-வது முறையாக கருணாநிதி ஆட்சிக்கு வந்து நிறைவேற்றுவார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இந்த மாவட்டத்தை வாழ வைக்கும் திட்டம். அதனால் தான் பக்கத்து மாநிலத்திற்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது நம்முடைய திட்டம்.

முறையாக உருவாக்கப்பட்ட திட்டம், கர்நாடக அரசு ஒத்துக் கொண்டு உருவாக்கிய திட்டம். மேலும் இந்த திட்டம் முழுவதும் நமது பகுதியில் தான் நடக்கிறது.

தர்மபுரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தண்ணீர் கிடைக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற நிலம் வேண்டும். இதற்கு சில தலைவர்கள் குறுக்கு சால்' ஓட்டுகிறார்கள். மேலும் தொழிற்பேட்டைகள் அமைக்க மின்சாரம் தேவை. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் தேவையான மின்சக்தி கிடைக்கும். அது கிடைத்தவுடன் தொழிற் பேட்டைகள் தொடங்கப்படும் என்றார் அன்பழகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X