காந்தி கண்ணாடி, வாட்ச், செருப்பு: திட்டமிட்டபடி ஏலம் - அமெரிக்கர்
டெல்லி: மகாத்மா காந்தியடிகளின் கண்ணாடி, பாக்கெட் வாட்ச், செருப்பு, தட்டு, கிண்ணம் உள்ளிட்டவற்றை திட்டமிட்டபடி ஏலம் விடுவேன். இவற்றை ஏலம் விடக் கூடாது என இந்திய அரசு விரும்பினால், இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக 5 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் என அமெரிக்கரான ஜேம்ஸ் ஓடிஸ் திட்வடட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஓடிஸ். இவரிடம் காந்தியடிகள் பயன்படுத்தி மூக்குக் கண்ணாடிகள், பாக்கெட் வாட்ச், ஒரு ஜோடி செருப்பு, ஒரு தட்டு, கிண்ணம் ஆகியவை உள்ளன.
இவற்றை நியூயார்க்கைச் சேர்ந்த ஆன்டிகோரம் என்ற ஏல நிறுவனத்தின் மூலம் மார்ச் 5ம் தேதி ஏலம் விடவுள்ளார்.
இதையடுத்து இந்திய அரசு, ஓடிஸுக்குக் கண்டனம் தெரிவித்தது. காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடக் கூடாது என அது கூறியது. மேலும், ஆன்டிகோரம் நிறுவனத்தை அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தொடர்பு கொண்டு ஏலத்தை நடத்தக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் திட்டமிட்டபடி ஏலம் நடைபெறும் என ஆன்டிகோரம் கூறியுள்ளது. அதேபோல நிச்சயம் காந்தியின் நினைவுப் பொருட்களை ஏலத்திற்குக் கொண்டு வருவேன் என்று ஓடிஸும் கூறியுள்ளார்.
அதேசமயம், இந்தியா விரும்பினால் இந்தப் பொருட்களைத் திருப்பித் தரத் தயார். ஆனால், இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக ஐந்து சதவீத நிதியை இந்திய அரசு ஒதுக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் இவற்றைத் திருப்பித் தருகிறேன் என்று கூறியுள்ளார் ஓடிஸ்.
இந்திய அரசுத் தரப்பிலிருந்து தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஓடிஸ் தெரிவித்துள்ளார்.
இப்படி அனைத்து வழிகளிலும் காந்தியின் பொருட்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹோட்டல் அதிபரான சந்த் சிங் சத்வால் என்பவரை இந்திய அரசு அணுகியுள்ளதாக தெரிகிறது. அவர் மூலம் இந்தப் பொருட்களை ஏலம் எடுத்து அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.