குப்பத்து சிறார்களின் கம்ப்யூட்டர் கண் திறக்கும் தீபம்!
சென்னை: ஏழை, எளிய குப்பத்து சிறார்களுக்கு கம்ப்யூட்டர் அறிவையும், பொது அறிவையும் புகுத்தும் மகத்தான சேவையில் ஈடுபட்டுள்ளது சென்னையைச் சேர்ந்த தீபம் என்ற அமைப்பு.
இதுகுறித்து தீபம் கூறுவதாவது..
எங்களில் சிலருக்கு, நமக்காக நிறையக் கொடுத்த சமூகத்திற்கு ஏதாவது திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நம்மை விட வசதியில்லாதவர்களுக்கு பணம் அளித்து உதவலாம். அது எளிதான உதவிதான்.
ஆனால் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் பல குடிசைப் பகுதிகளைத் தாண்டிச் செல்லும்போது, அங்கு பார்த்த எண்ணற்ற ஏழை மக்களின் நினைவு எங்களைத் தாக்கியது. அவர்கள் இப்படி இருக்க யார் காரணம் என்று யோசித்தோம்.
நிச்சயம் யாருமே ஏழைகளாக இருக்க வேண்டும் என ஆசைப்பட மாட்டார்கள். நாம் ஏன் இவர்களை முன்னேற்றக் கூடாது என்று சிந்தித்தோம். அவர்களுக்கு வெறும் மீனைக் கொடுக்காமல், மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் என்ன என்று யோசித்தோம். அதில் பிறந்ததுதான் தீபம்.
இது கம்ப்யூட்டர் உலகம். இதைப் பயன்படுத்தி அவர்களை மேம்படுத்த்த திட்டமிட்டோம்.
நான்கு கோணங்களில் எங்களது திட்டத்தை திட்டமிட்டோம்.
குடிசை வாழ் ஏழை சிறார்களுக்கு பொது அறிவை வளர்ப்பது.
ஆங்கில அறிவை மேம்படுத்துவது.
கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது.
தனித்திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவது ஆகியவையே எங்களது நோக்கமாகும்.
இப்படிச் செய்வதன் மூலம் தாழ்ந்த நிலையில் உள்ள அவர்களை உலக குடிமக்களாக தரம் உயர்த்த முடியும் என்பதே தீபத்தின் நம்பிக்கை.
இதுவரை நாங்கள் செய்துள்ள பணிகள்...
- 2008ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி சென்னை பெருங்குடியில் உள்ள நலம்தானா என்ற சுய உதவிக் குழுவின் தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து முதல் பேட்ச்சை ஆரம்பித்தோம்.
- தற்போது இரண்டு இடங்களில் நாங்கள் பாடம் நடத்தி வருகிறோம். பெசன்ட் நகரில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் பெசன்ட் நகரில் உள்ள ஒரு குப்பம். ஒவ்வொன்றிலும் தலா 30 மாணவர்கள் இருக்கிறார்கள்.
- வாரந்தோறும் சனிக்கிழமையன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இரண்டு மணி நேரம் போதனை நடைபெறும்.
- பெசன்ட் நகர் குப்பத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் எங்களுக்கு பல்வேறு தன்னார்வத் தொண்டர்கள் தானமாக அளித்த லேப்டாப்களுடன் சென்று பாடம் நடத்துகிறோம்.
- தீபம் குரூப்பில் 60க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இடம் பெற்று சேவையாற்றி வருகின்றனர்.
- கிட்டத்தட்ட 20 வார பயிற்சிக்குப் பின்னர் நாங்கள் அந்த சிறார்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறோம்.
நீங்கள் எப்படி உதவலாம்?
நீங்களும் கூட தீபத்தில் இணைந்து தன்னார்வத் தொண்டராக செயல்படலாம், சிறார்களுக்குப் போதிக்கலாம், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கலாம்.
உங்களிடம் செயல்படக் கூடிய நிலையில் பழைய லாப்டாப்கள், கம்ப்யூட்டர்கள் இருந்தால் தாராளமாக எங்களுக்கு தானமாக தரலாம்.
உங்களிடம் உள்ள பழைய லேப்டாப்கள், கம்ப்யூட்டர்களை எங்களுக்குத் தர விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள்..
+91 98842 77487 பாலாஜி (சென்னை)
+91 99003 96775 - மீரா (பெங்களூர்)
+91 99720 96773 - விஜய் (பெங்களூர்)
தீபத்தில் இணைந்து தொண்டராக பணியாற்ற அல்லது ஆதரவளிக்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய இமெயில் முகவரிகள்..
கார்த்திகேயன் - [email protected]
அர்ச்சனா - [email protected]
மேலும் விவரங்களுக்கு - http://www.deepam.in/