வன்னி முகாம்கள்-மூட கோரி லண்டனில் பொதுக்கூட்டம்!
வன்னி வதை முகாம்களில் தவிக்கும் அப்பாவி தமிழர்களை அவர்களது வீடுகளுக்கு சுதந்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என கோரி தமிழ் ஒருமைப்பாடு அமைப்பு லண்டனில் வரும் 17ம் பொது கூட்டம் நடத்துகிறது.
விடுதலை புலிகளுக்கான எதிராக போர் என்ற பெயரில் இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவிந்தது. லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
மேலும், மக்களை சிறைபிடித்த இலங்கை ராணுவம் நாசி ராணுவ போன்ற முகாம்களை அமைத்து தமிழர்களை துன்புறுத்தி வருகிறது. சுமார் 3 லட்சம் தமிழர்கள் அங்கிருக்கும் தற்காலிக வீடுகளில் ஆடு, மாடுகளை போல் நெருக்கியடித்து வாழ்கின்றனர். உணவு, தண்ணீர், மருந்து மற்றும் சுகாதார பற்றாக்குறையால் கொஞ்சம் கொஞ்சமாக பலியாகி வருகின்றனர்.
இந்த வன்கொடுமை முகாம்களில் ஒவ்வொரு வாரமும் சுமார் 40 மக்கள் வரை பலியாகி வருகின்றனர். அடைத்து வைக்கப்பட்டவர்களில் சுமார் 31 ஆயிரம் குழந்தைகள் இருக்கின்றனர்.
சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் அவர்களில் 200 பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில் தான் கழிப்பிடங்கள் உள்ளன. அங்கிருப்பவர்களில் 30 சதவீதம் சத்து குறைவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் காமாலை போன்ற கொடூர நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.
விரைவில் பருவமழை காலம் துவக்கவிருக்கும் நிலையில் அவர்களின் நிலைமை இன்னும் மோசமாகலாம். சமீபத்தில் இந்த முகாம்களை பார்வையிட்ட மெடிசின் சான்ஸ் பிரான்டியர்ஸ் அமைப்பினர் ராணுவத்தினரின் தோட்டாக்களுக்கு காயமடைந்த சிறுவர்களுக்கு மருந்திட்டதாக அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.
அங்கு அனைவருக்கும் கொடுமை இழைக்கப்பட்டு வருகிறது. இந்த சிறை முகாம்களை இழுத்து மூட வேண்டும். அங்கு முடக்கப்பட்டிருப்பவர்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இதற்காக வரும் 17ம் தேதி மாலை சுமார் 6 மணிக்கு லண்டன், குயின் மேரி பல்கலைக்கழகத்தின், ரூம் 210, சட்ட அறையில் கூட்டம் நடக்கவிருக்கிறது.
இதில் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஏழை குறித்து தொடர்ந்து எழுதி, அவர்களுக்காக பிரச்சாரம் செய்து வரும் சோஷியலிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பீட்டர் டாபே பங்கேற்கிறார். இவர் தமிழர்களின் பல பகுதிகளை சுற்றி பார்த்து அங்குள்ள நிலைமை அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு நடத்தப்பட்ட போராட்டத்தை ஒருங்கிணைத்த ஜனனி பரம்சோதி, அம்னஸ்டி அமைப்பின் தெற்கு ஆசிய ஆராய்ச்சியாளரும் தமிழ் எழுத்தாளருமான நாகர்ஜூன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் சேனன், சர்வதேச ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஒருமைப்பாடு, [email protected] என்ற மின்னஞ்சலிலோ அல்லது 07908050217 என்ற எண்ணுக்கு அழைத்தோ தொடர்பு கொள்ளலாம்.