கோடை விடுமுறை: வேடந்தாங்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்
மதுராந்தகம்: கோடை விடுமுறையை முன்னிட்டு வேடந்தாங்கலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்திலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு அக்டோபர் மாத இறுதியில் வெளிநாடுகளில் இருந்து பல அரிய வகை பறவைகள் வரத் துவங்கும். பருவகாலம் மாறிய பிறகு தங்கள் நாடுகளுக்கு திரும்பும்.
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், பர்மா, சைபீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அரிய வகை பறவையினங்களான வக்கா, பாம்புதாரா, நீர் காகம், வெள்ளை அரிவாள் மூக்கன், தட்டவாயன், கரண்டிவாயன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை,கூழைக்கிடா, வர்ணநாரை உள்ளிட்டவை வந்து செல்லும்.
கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 18-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்தன. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக சரணாயலம் திறக்கப்பட்டது.
சரணாலயம் வேடந்தாங்கல் ஏரியில் அமைந்துள்ளது. நீரில் வாழக்கூடிய கடப்பை, கருவேல மரங்களில் பறவைகள் கூடுகட்டி குஞ்சுப் பொரித்துள்ளது. இதனால் தற்போது சரணாலயத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.
கோடை விடுமுறை என்பதால் தினமும் சரணாலயத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் உள்ள நீரின் அளவைப் பொருத்தே 2 மாதங்கள் வரை சரணாலயத்தில் பறவைகள் தங்கும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.