திருச்செந்தூர், பழனியில் கந்தசஷ்டி விழா நாளை துவக்கம்: 31ல் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 31ம் தேதி நடக்கிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா நாளை (26ம் தேதி) தொடங்குகிறது. இதையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.
காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். 7 மணிக்கு யாகசாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மன் சகிதமாக எழுந்தருளிய பிறகு பூஜை நடக்கிறது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீரவாள், வேல்வகுப்பு பாடல்களுடன் மேள வாத்தியம் முழங்க சண்முக விலாசம் வருகிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலுக்குள், வெளி பிரகாரங்கள், கோவில் விடுதிகள், சிறுகுடில்கள் மற்றும் தனியார் விடுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருப்பர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹரம் வரும் 31ம் தேதி நடக்கிறது.
பழனியிலும் நாளை கந்தசஷ்டி விழா துவக்கம்
பழனி முருகன் கோவிலில் நாளை (26ம் தேதி) கந்தசஷ்டி விழா துவங்குகிறது.
பழனி மலை முருகன் கோவிலில் பழனி ஆண்டவருக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் நாளை (26ம் தேதி) கந்தசஷ்டி விழா துவங்குகிறது.
வரும் 31ம் தேதி சஷ்டி தினத்தன்று மாலை 5.30 மணிக்கு மேல் சின்னக்குமாரசுவாமி பெரிய தங்கமயில் வாகனத்தில் கேடயம், கத்தி, வில், அம்புடன் வடக்கு கிரி வீதிக்கு எழுந்தருள்வார்.
அங்கு தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அன்று மாலை 3 முதல் இரவு 11 மணி வரை மலைக்கோவில் சன்னதி அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.