அசத்தும் இந்தோனேஷியத் தமிழர்கள்... நாட்டுப்புறக் கலைகளுடன் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்!
ஜகார்த்தா(இந்தோனேஷியா): ஒயிலாட்டாம், கரகாட்டம், மயிலாட்டம், உறியடியுடன் சித்திரை தமிழ்ப் புத்தாண்டை இந்தோனேஷியத் தமிழர்கள் படு விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.
தமிழகத்திலிருந்து வந்திருந்த நாட்டுபுற கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சியுடன் உள்ளூர் தமிழர்கள் உறியடி, சிலம்பாட்டம் ஆடி அசத்தினர்..
இந்தோனிஷிய தமிழ்ச் சங்கம் கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட சங்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கு தமிழ் வகுப்புகள், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
11ம் நூற்றாண்டு முதல்
ராஜேந்திர சோழன் படையெடுத்துச் சென்ற 11ம் நூற்றாண்டு காலம் முதலாகவே, இந்தோனேஷியாவில், தமிழர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது, அப்போது முதலாகவே வணிகத்திற்காக தமிழர்கள் சென்ற வண்ணம் இருந்திருக்கிறார்கள்.
அடுத்ததாக 19ம் நூற்றாண்டில் இந்தோனிஷியாவை டச்சுக்காரர்கள் ஆண்ட போது, தமிழகத்திலிருந்து ஏராளமானவர்கள் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்தோனேஷிய சுதந்திரத்திற்குப் பின் பலர் தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்து விட்டனர். அங்கேயே தங்கிவிட்டவர்கள் வடகே சுமத்ரா தீவின் மேடான் பகுதியில் மொத்தமாக குடியேறி உள்ளனர்.
பிற்காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பிறகு, தலைநகரம் ஜகார்த்தாவுக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார்கள்.
சமீப வரலாற்றில், நாற்பது ஆண்டுகளாக, தமிழகத்திலிருந்து வேலை நிமித்தமாக ஜகார்த்தா சென்றவர்களும் பெருமளவில் உள்ளனர். அம்மன் கோவில் முருகன் கோவில்கள் நிறுவி ஆடிப்பூரம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் கொண்டடி வருகிறார்கள்.
தமிழ்ச் சங்கத்தின் உறவுப் பாலம்
தமிழகத்திலிருந்து சமிபத்தில் சென்ற தமிழர்களையும், இரு நூற்றாண்டுகளாக அங்கேயே வசித்துவரும் தமிழர்களையும் ஒன்றாக இணைக்கும் பாலமாக இந்தோனேஷிய தமிழ்ச் சங்கம் செயல்படுகிறது. ஆண்டுதோறும் மூன்று முக்கிய விழாக்கள் நடத்துகிறார்கள்.
இளைஞர்களுக்கு தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. தமிழ் நூலகங்கள் இயங்குகின்றன. கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்துடனான பாரம்பரியம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது.
ஐந்தாவது ஆண்டாக சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப் பட்டது. தமிழகத்திலிருந்து நாட்டுப்புற கலைஞர்கள் முதன் முறையாக இந்தோனேஷியாவுக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர்.
கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், நெருப்பு விளையாட்டு, தந்திரக் காட்சிகள் என அந்தக் குழுவினரின் சாகசங்களைக் கண்டு இந்தோனேஷியத் தமிழர்கள் அசந்து விட்டனர்.
மேலும் உள்ளூர் தமிழர்களின் சிலம்பாட்டமும் இடம்பெற்றது. உறியடிப் போட்டி தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இளைஞர்களும், சிறுவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறியடித்து , பம்பரம் சுற்றி விளையாடினார்கள்.பெண்களுக்குகோலப் போட்டியும் இடம் பெற்றது.
திரிவேணி குழுமம்
தமிழக பாரம்பரிய உணவுகள் வீட்டிலிருந்தே செய்து கொண்டு வந்துள்ளார்கள், மாலை 5 மணி அளவில் தொடங்கிய விழா இரவு 11 மணி வரையிலும் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். கிட்டத் தட்ட தமிழக கிராமியத் திருவிழா போல் நடைபெற்றது. இந்திய வம்சாவளியினரும் விழாவில் கலந்து கொண்டனர்.
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திரிவேணி குழுமம், இந்த விழாவுக்காக நிதியுதவியுடன், தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களை அழைத்து வரவும் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
திரிவேணி குழுமத்திற்கு இந்தோனேஷியாவில் இரண்டு நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன, அதில் ஏராளமான தமிழர்கள் வேலைப் பார்த்து வருகிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
திரிவேணி நிறுவனத்தின் இந்தோனேஷிய பொது மேலாளர் குமரேசனும் விழாவுக் குழுவினருடன் இணைந்து செயல்பட்டார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மேற்பார்வையில் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
- இர தினகர்