தொல்லியல், கடலாய்வுகளுக்கும் குரல் கொடுங்கள்!!... - தமிழ் மரபு அறக்கட்டளை சுபாஷினி
ஆஸ்டின் (யு.எஸ்): தொல்லியல் மற்றும் கடலாய்வுகளுக்கு ஆதரவாக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாஷினி வேண்டுகோள் விடுத்தார்.
ஆஸ்டின் நகர தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா மற்றும் 26வது ஆண்டு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு முனைவர் க.சுபாஷினி மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினார்.
தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் வரலாற்று ஆவணங்களையும் கல்வெட்டுகளையும் டிஜிட்டல் முறையில் பேணிக்காக்கும் அரும்பணியை பாராட்டி முனைவர் க.சுபாஷினிக்கு ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
தொல்லியல், கடலாய்வுகளுக்கு ஆதரவு தாருங்கள்..
ஏற்புரை ஆற்றிய சுபாஷினி, "அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டுவரும் அனைவரும் மிகவும் பாரட்டுக்குரியவர்கள். இத்தகைய விழாக்கள் தமிழர்கள் ஒன்றாகக்கூடி மகிழ்ச்சியூட்டுகிறது.
நமது தாய்மொழி பற்றிய தொல்லியல் மற்றும் கடலாராய்ச்சிகள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவராமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கீழடி ஆராய்ச்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அதற்கு உலகத் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகத் தமிழர்கள் ஒன்று திரண்டது போல் தொல்லியல், கடலாராய்ச்சிகளுக்கு ஆதரவாகவும் திரள வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.
சான் ஆன்டோனியோ...
முன்னதாக காலையில் சான் அண்டோனியோ தமிழ்ச் சங்கம் மற்றும் சான் அண்டோனியோ தமிழ்ப் பள்ளி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழியுடன், தமிழ் வரலாற்றையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ் வட்டெழுத்து, தற்கால தமிழ் எழுத்துக்கள் என தமிழ் மொழியின் வரலாற்றை எடுத்துக் கூறும் ஆவணங்கள் கல்வெட்டுகள் ஏராளம் உள்ளன, தமிழகப் பயணத்தின் போது குழந்தைகளை அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.
தமிழின் வரலாற்றையும் தெரிந்து கொள்ளும் போது, குழந்தைகள் தமிழர் என்று பெருமையுடன் வளர்வார்கள்.பெரியவர்கள் ஆன பிறகு தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் ஆதரவாக திகழ்வார்கள் என்றும் கூறினார்.
தமிழ் வரலாறு தொடர்பான தகவல்கள் ஆராய்ச்சி ஆவணங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்யுமாறு தமிழ் மரபு அறக்கட்டளைக்கு, தமிழ்ப்பள்ளி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆவண செய்வதாக முனைவர் க.சுபாஷினி உறுதி அளித்தார். அரங்கத்திற்கு வெளியே திருவிழா கடைவீதி போல் பல்வேறு கடைகள் களை கட்டியிருந்தது. விழாவின் நிறைவாக இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-இர தினகர்