மலேசியாவில் நடக்கும் 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
கோலாலம்பூர்: 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 1964 ஆம் ஆண்டு டெல்லி மாநகரில் நடைப்பெற்ற 26-வது அனைத்துலக தெற்கிழக்காசியப் பிராந்திய அறிஞர் குழாம் சந்திப்பின்போது, தமிழ் மொழியின்பாலும் அதன் வளர்ச்சியின்பாலும் அதிபற்றுமிக்க தலைச்சார் கல்விமான்களின் சிந்தனையில் உதித்த விளை பயனாகும்.
இவர்களது முயற்சியின் விளைவாக முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைப்பெற்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் இம்மாநாடு நடந்துள்ளது: பாரிஸ் (பிரான்ஸ்)-1970, யாழ்ப்பாணம்(இலங்கை)-1974; மதுரை (தமிழ் நாடு, இந்தியா)-1981; கோலாலம்பூர் (மலேசியா)-1987; மொரீஷியஸ்-1989 மற்றும் தஞ்சாவூர் (தமிழ் நாடு, இந்தியா)-1995.
9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1ம் தேதி 2015 வரை கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க - ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும், கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, கலாச்சாரம், சமயம், மானிடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல் எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வரவேற்கப்படுகின்றனர்.