விதைப்போம் மனிதத்தை!!!
கேரளாவில் கொல்லப்பட்ட இளைஞர் மது குறித்த உருக்கமான கவிதை.
Recommended Video
-வந்தனா ரவீந்திரதாஸ்
சகோதரா....
பசியென்று வந்த உன்னை
பாடையேற்றிய ஜனநாயகத்தின் மாண்பு....
தலைக்குனிவின் உச்சக்கட்டம்....
ஒளிர்கிறது இந்தியா....ஒய்யாரமாய்...
சுயநல சூழலுக்குள் சுருங்கிப் போன
இதயங்களின் பசிக்கு விலை -
உன் உயிரோ?
ஊனுருகி... எலும்பே மிஞ்சி நிற்கும்
உன் உருவில்....கொழுத்த கயவர்களின்
முகத்திரையை கண்டோம்....
நகர்ந்து போகாத மரம்கூட
நன்மைகள் பல செய்ய...
ஆட்கொல்லியாய் மாறி - ஆறறிவற்ற
விட்டில் பூச்சிகளை கண்டோம்...
விசை ஒடிந்த தேகத்தில்...
வலிகளின் உயிர் முடிச்சையும்
ஹீனமான முனகலையும் கேட்டோம்....
உன் கடைசி உயிர் துள்ளலும்
விண்ணை முட்டும் மரண ஓலமும்
செவிப்பறையை கிழித்து செல்கின்றன
சகோதரா....
மனிதத்தை பயிர் செய்யாமல்
தேசியம் விதைத்து என்ன பயன்
என்கிறாயா?
இரவுகளும் பகல்களும்
போட்டி போட்டு சுழன்றாலும்
உன் மீது இழைக்கப்பட்ட
வரலாற்று பிழை என்றுமே மாறாது...
நேற்று எச்சத்திலும்... மிச்சத்திலும்
வாழ்வை நடத்தினாய்.... இன்று
கடமை தவறிய மனிதத்திற்கு - உன்
உதிரத்தையே உரமாக்கி விட்டாய்
காலத்தின் அடிமைகளை கட்டவிழ்க்க
எந்த கிருஷ்ண பரமாத்மாக்களும்
என்றும் வரப்போவதில்லை...
ஜீவகாருண்ய நாட்டின்
கசடுகளை நீக்க...
மனித மாண்புகளே
தயாராகிவிட்டன....
எச்சிலை தனிலே எரியும் சோற்றுக்கு
பிச்சைக்காரர்கள் பெருகி உள்ள நாட்டில்...
உன் ரத்தம் கடைசி வித்தாகட்டும்...
வருங்கால தலைமுறையாகிலும்
மனிதநேயத்தை
உயர்த்தி பிடிக்கட்டும்...
மனிதத்தை விதைத்து
அன்பை அறுவடை செய்ய....
இனி வீறு கொண்டு எழட்டும்...
பாறைகளின் இடுக்கே
துளைத்தெழும் புல்லைபோல....
வன்முறை எனும் முகத்திரையை கிழிக்க
புழுதி கிளப்பி அதிர புறப்படட்டும்...!