ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் திறப்பு - நீதி தேவதையை கண் குளிர வழிபட்ட பக்தர்கள்
கோவை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீதி தேவதையை கண் குளிர தரிசனம் செய்தனர்.
கோவை: நீதி தேவதையாக திகழும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு அம்மனை கண் குளிர தரிசனம் செய்தனர். இந்த அம்மனை வணங்கிச் சென்றால் மனதில் நினைத்த காரியம் உடனே கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்புகள் இருந்தாலும் பலவிதமான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதான நம்பிக்கை உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது மாசாணி அம்மன் கோயில். இந்தக் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. பெண்களின் காவல் தெய்வமான மாசாணியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இலங்கையில் சீதா தேவியை மீட்க சென்றபோது இங்கு வந்து மாசாணியம்மனை ராமர் வழிபட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. கோவில் மண்டபச் சுவற்றிலே ஸ்ரீராமபிரான் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன.
இந்த அம்மன் கையில் உடுக்கையுடன் சயன நிலையில் காணப்படுகிறார். ஆலயத்தின் தெற்குப்புறம் லிங்க வடிவத்திலான கல்லின் மீது பக்தர்கள் மிளகாய் அரைத்துப் பூசி வேண்டுதல் வைக்கின்றனர். பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சொத்துக்களையோ தமது உடைமைகளையோ பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளனவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று தங்களுக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து முறையிட்டு விட்டு கோயிலின் தென் மேற்குப் பகுதியில் போடப்பட்டுள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பரிகாரம் பெறுவதும் குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளாவதும் இன்றைக்கும் கூட இந்தத் தெய்வத்தின் மகிமையை எடுத்துக்காட்டுகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மூடப்பட்டிந்த இந்த கோவில் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வந்து மாசாணி அம்மனை கண் குளிர தரிசனம் செய்தனர். தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முக கவசம் அணிந்து வரும் பக்தர்களுக்குக் கோயிலுக்குள் அனுமதி அளிக்கப்பட்டது. அனைவரும் தனி மனித இடைவெளியைப் பின்பற்றி மாசாணி அம்மனை வழிபட்டனர்.
கோயில் வளாகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் பொது போக்குவரத்து துவங்கப்பட்டதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடை வைத்து உள்ள சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்புகள் இருந்தாலும் பலவிதமான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதான நம்பிக்கை உள்ளது.












Click it and Unblock the Notifications