நினைத்த காரியத்தை நிறைவேற்றிய ஐயப்பன்... 18 ஆயிரம் நெய் தேங்காயால் அபிஷேகம் செய்யும் பக்தர்
பெங்களூரு ஐயப்ப பக்தரின் சார்பாக 18 ஆயிரம் தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்யப்பட உள்ளது.
திருவனந்தபுரம்: நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினால் இறைவனுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவார்கள். பெங்களூருவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகத்திற்கு ஆன்லைனில் முன் பதிவு செய்துள்ளார். இதற்கான தேங்காய்கள் லாரி மூலம் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் தற்போது மகரவிளக்கு மற்றும் மகரஜோதி தரிசனத்திற்கான பூஜைகளும், படிபூஜையும் நடைபெற்று வருகின்றன. இப்பூஜைகளைக் கண் மனம்குளிர தரிசனம் செய்ய வேண்டியே நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலைக்கு வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் கடுமையான விரதமிருந்து தலையில் இருமுடி கட்டிக்கொண்டு வந்தே ஐயப்பனை தரிசிப்பதுண்டு. இருமுடி கட்டி வரும் ஐயப்ப பக்தர்கள் இருமுடியில் நெய்யால் நிரப்பட்ட 1 அல்லது 2 தேங்காய்களையும் உடன் கொண்டு வருவதுண்டு.

இருமுடி சுமக்கும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் சிவன் விஷ்ணுவின் அம்சம்தான். இதனை அனைவரும் உணரும் வகையிலேயே முக்கண் கொண்ட சிவ அம்சமான தேங்காயில் விஷ்ணுவின் அம்சமான பசு நெய் ஊற்றி எடுத்துச்செல்லப்படுகிறது. இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே சபரிமலைக்கு செய்யும் பக்தர்கள் இருமுடியில் நெய் தேங்காய் எடுத்துச்செல்கின்றனர்.

ஐயப்ப பக்தர் நேர்த்திக்கடன்
சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்பனை தரிசிக்கும் போது அந்த நெய் தேங்காய்களை சந்நிதானத்தின் முன்பாக உடைத்து தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள். இது தான் பெரும்பாலான ஐயப்ப பக்தர்களின் வழக்கமான நடைமுறையாகும். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தான் நினைத்திருந்த காரியம் சபரிமலை ஐயப்பனின் அருளால் வெற்றிகரமாக நிறைவேறியதற்காக 18 படிகள், 18 மலைகளை நினைத்து நேர்த்திக்கடனாக 18 ஆயிரம் நெய் தேங்காய்களை அபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்.

லாரிகளில் வந்த நெய் தேங்காய்
இதனையடுத்து, 18 ஆயிரம் தேங்காய், மற்றும் அபிஷேகத்திற்கு தேவையான நெய் ஆகியற்றை சேகரித்து லாரியின் மூலம் பம்பைக்கு அனுப்பி வைத்தார். 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகத்திற்கு உரிய கட்டணமான 18 லட்சம் ரூபாய் வரைவோலையையும் தேவஸ்தான செயல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார். லாரி மூலம் பெங்களூரு பக்தர் அனுப்பி வைத்த தேங்காய் மற்றும் நெய் ஆகியவற்றை தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பெற்றுக்கொண்டார்.

ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம்
தேவஸ்தான ஊழியர்களின் உதவியுடன் 18 ஆயிரம் தேங்காய்களிலும் நெய்யை நிரப்பும் பணி நடைபெற்றது. இதனையடுத்து நெய் நிரப்பட்ட தேங்காய்கள் சபரிமலை சன்னிதானத்திற்கு டிராக்டர் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. புதன்கிழமை காலையில், பெங்களூரு ஐயப்ப பக்தரின் சார்பாக 18 ஆயிரம் தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்யப்பட உள்ளது. சபரிமலை வரலாற்றிலேயே, ஒரே பக்தர் 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்துவது என்பது இதுவே முதல் முறை என்று தேவஸ்தான செயல் அதிகாரியான கிருஷ்ணகுமார வாரியர் ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications