தமிழ் மாதங்களின் பிக்பாஸ் ஆனி... 32 நாள் இருக்கு! - ஆனி மூலம் அரசாளுமா?
தமிழ் மாதங்களிலேயே பெரியமாதமாக ஆனி மாதம் போற்றப்படுகிறது. ஆனி மாதத்தில் மொத்தம் 32 நாட்கள் உள்ளது.
சென்னை: சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை இந்த மாதத்தில் பகல் பொழுது நீண்டிருக்கும். இந்த மாதத்தில் 32 நாட்கள் உள்ளன.
ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள்.
ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாதக் காலமாகும்.
ஆனியில் 32 நாட்கள்
ஜேஷ்டா என்ற பெயருக்கு ஏற்றாற் போல் தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். மிதுன ராசியானது அளவில் சற்று பெரிய ராசி என்பதால் இதனைக் கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்பதே இதற்குக் காரணம். இதன் காரணமாகவே இந்த மாதத்தில் ‘அகஸ்' என்றழைக் கப்படும் பகல் பொழுதின் அளவும் அதிகரித்திருக்கிறது.
ஆனி கேட்டை நட்சத்திரம்
ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.
பழனியில் ஜேஷ்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பழனி ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் அவர்களது தலைமை பதவி நீடிக்கும் என்பது ஐதீகம்.
ஆனி மூலம்
‘ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்' என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் அதனால் நிர்மூலம் உண்டாகும் என்றும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையில் ஆனி மூலம் அரசாளும், கன்னி ராசியில் வரும் மூலம் நிர்மூலம் என்பதே ஆகும்.
அம்மனுக்கு உகந்த நாள்
ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரசயோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி. அதனால் தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது.
கன்னி மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாள், அஷ்டமி அல்லது நவமியோடு இணைந்து வரும். அதாவது, துர்காஷ்டமி அல்லது ஆயுத பூஜையோடு இணைந்து வருகிற நாள். இந்த நாட்களில் அசுரர்களை அம்பாள் நிர்மூலம் ஆக்கினாள் என்பதால் பெண் மூலம் நிர்மூலம் என்ற சொல்வழக்கும் தோன்றியது.
மூத்த குழந்தைகளுக்கு ஆகாதா
‘தலைச்சனுக்கு தலைச்சன் ஆகாது' என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளது. ஆனி மாதத்தில் பிறந்த மூத்த மகனுக்கும் (ஜேஷ்ட குமாரன்), அதே ஆனி மாதத்தில் பிறந்த மூத்த பெண் குழந்தைக்கும் (ஜேஷ்ட குமாரத்தி), ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் ஆனி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது, சந்ததி பாதிக்கப்படும் என்று உரைக்கிறது காலாமிருதம் என்கிற ஜோதிட நூல். இதனை ‘த்ரிஜேஷ்டை' என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளாது தலைச்சனுக்குத் தலைச்சன் ஆகாது என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி விடுகிறோம். இனியாவது பழமொழியின் உண்மை தன்மை அறிந்து சொல்வது நல்லது.