அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி பிரம்மோற்சவம்: அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் உலா
திருவண்ணாமலை அருணச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்சவர் சந்திரசேகர் அம்பாளுடன் உலா வந்து அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5ஆம் பிரகாரத்தில் அருள்பாலித்தார். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும்.
இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும்.

திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 7ஆம் தேதி அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னதிக்கு முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவின் 5ஆம் நாள் விழாவான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5ஆம் பிரகாரத்தில் உலா வந்தார். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி பிரம்மோற்சவ விழா உடன் இணைந்து ஆனி திருமஞ்சனமும் வருவது சிறப்பானதாக உள்ளது.
ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சனத்தன்று நடராஜர் வீதி உலா வருவது சிறப்பு. ஆனால் இந்த ஆண்டு இந்த பத்துநாட்கள் திருவிழாவில் முடிவதற்குள் நடராஜர் வீதி உலா வருவது சிறப்பானது என்று அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற சகல ஜீவராசிகளும் இன்புற்று வாழ அண்ணாமலையாரை பிரார்த்தனை செய்து கொள்வோம் என தெரிவித்தார் கோவில் அர்ச்சகர். பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளன்று ஐயங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும்.












Click it and Unblock the Notifications