கஷ்டங்களை நீக்கும் அஷ்ட பைரவர்கள்: ஜென்மாஷ்டமியில் விபூதி அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்
கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்ட பைரவர்களையும் வணங்கினால் தீய சக்திகளையும் எதிர்ப்புகளையும் துவம்சம் செய்து காத்தருளுவார் காலபைரவர் என்பது நம்பிக்கை.
சென்னை: கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்து, நம் வாழ்வில் பக்கத்துணையாக இருப்பார் பைரவர். கிரக தோஷங்கள் அனைத்தையும் விலக்கி அருளுவார். பைரவரில் எட்டு பைரவர்கள் உண்டு என்கிறது புராணம்.
எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று போற்றப்படுகிறார்கள். பைரவர் ஜெயந்தி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் பைரவர் காயத்ரி மந்திரங்களைப் பற்றியும் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்கினால் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.
பைரவருக்கு உகந்த நாள், அஷ்டமி. குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி. கஷ்டமும் துக்கமுமான நிலையில், அஷ்டமி என்றில்லாமல், பைரவரை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். பூஜிக்கலாம். வணங்கலாம். .
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளலாம். தயிர்சாதம் நைவேத்தியம் செய்யலாம். வடை மாலை சார்த்தியும் பிராத்தனை செய்யலாம். பைரவர் அபிஷேக பிரியர் என்பதால் அவருக்கு 1000 கிலோ விபூதி கொண்டு மகா அபிஷேகம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.
பாஜக- திரிணமூல்- இடதுசாரிகள் இடையே மோதலுக்கு மத்தியில் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு
அஷ்ட கால பைரவரை விபூதி அபிஷேகம் செய்து வணங்கினால் பயங்கள் அகலும், தோஷங்கள் நீங்கும். வயிறு தொடர்பான நோய்கள், இதய நோய் உள்ளிட்ட தீராத நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்கிறார் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ முரளீதரசுவாமிகள்.
ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்
"ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்."
"ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்."
"ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்."
அஷ்ட பைரவர்கள்
மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன. திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள்.
அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான பிராம்ஹி விளங்குகிறாள்.
ருரு பைரவர்
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான மகேஸ்வரி விளங்குகிறாள்.
சண்ட பைரவர்
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள் செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான கௌமாரி விளங்குகிறாள்.
குரோதன பைரவர்
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான வைஷ்ணவி விளங்குகிறாள்.
உன்மத்த பைரவர்
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள் செய்கிறார்.குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான வராஹி விளங்குகிறாள்.
கபால பைரவர்
கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள் செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான இந்திராணி விளங்குகிறாள்.
பீக்ஷன பைரவர்
பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
சம்ஹார பைரவர்
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள் செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான சண்டிகை விளங்குகிறாள்.
1000 கிலோ விபூதி அபிஷேகம்
அஷ்ட பைரவர்களுடன் மஹாபைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் தன்வந்திரி பீடத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு பிரதி அஷ்டமியில் சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் நடந்து வருகிறது. தன்வந்திரி பீடத்தில் சதுர்சஷ்டி பைரவர் யாகமும் 74 பைரவர் யாகமும் நடைபெற்றுள்ளது என்பது மேலும் சிறப்பாகும். சனிக்கிழமை 27ஆம் தேதி பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் காலபைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகம் நடைபெற உள்ளது. நோய் பயம், எதிரி தொல்லைகள் நீங்க இந்த விபூதி அபிஷேகத்தில் பங்கேற்கலாம் என ஸ்ரீ முரளீதரசுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.