மைத்ர முகூர்த்த நேரத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுங்க மள மள வென கடன் பிரச்சினை தீரும்
தீராத கடன் பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் மைத்ர முகூர்த்த நேரத்தில் கடனில்ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால் மளமளவென கடன் தீரும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மதுரை: எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் நேரம்தான் மைத்ர முகூர்த்தம். கடனில்லாத வாழ்க்கை வாழணும். இருக்கிற கடனையெல்லாம் அடைத்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது. இந்த ஜூன் மாதத்தில் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 03:52 மணி முதல் 05:58 வரை கடன் அடைக்கும் மைத்ர முகூர்த்தம் வருகிறது.
மைத்ர முகூர்த்தம் ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
நீங்கள் பெருந்தொகையாகத் தரவேண்டிய கடன் தொகையில், கொஞ்சமேனும் குறிப்பிட்ட இந்த நாளில், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பிக் கொடுங்கள். எவ்வளவு பெரும் தொகையானாலும், சிறுக சிறுக அடைபட்டுவிடும் என்பது உறுதி.
ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

கடனாளியாவது யார்
ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.

கடன் தொல்லைகள்
ஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து தசாபுத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு வழக்கு கடன் தொல்லைகள் ஏற்படும். லக்னாதிபதி 6ஆம் வீட்டிலும் 6ஆம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்.

கடன் வாங்கக் கூடாத நேரம்
குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும் போது கடன் வாங்க கூடாது. எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார்.

கடனாளியாக்கும் சனிபகவான்
குரு ராகு, கேது கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்யக் கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது.

கடன் அடைக்கும் காலம்
செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் ஆகும். இதே போல செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தமாகின்றது. வரும் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை அனுஷ நட்சத்திரம் இணைந்து விருச்சிக லக்கினம் வரும் நேரம் கடன் அடைக்க ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமை மாலை 03:52 மணி முதல் 05:58 வரை கடன் அடைக்கலாம்.

கடன் பிரச்சினை தீர்க்கும் முகூர்த்தம்
கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிப்பவர்கள் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து,அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும்.

இந்த நாட்களில் கடன் தீர்க்கலாம்
ஆனி மாதத்தில் ஜூன் 22 தவிர 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:01 மணி முதல் 02:28 வரை கடன் அடைக்கலாம். அதே போல ஆடி மாதத்தில் 20.07.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 01:05 மணி முதல் மாலை 04:11 வரை கடன் அடைக்கலாம். 30.07.2021 வெள்ளிக்கிழமை இரவு 10:50 மணி முதல் இரவு 01:00 வரையிலும் கடன் அடைக்க நல்ல நாள். இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்.

பரிகாரம் என்ன
கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும் பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும். செவ்வாய்கிழமை விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம்.

கடன் தீர்க்க என்ன செய்வது
எந்த காரணத்திற்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. ருணம் எனில் கடன் என்று பொருள். கடன் தீர்க்க காலபைரவரை வணங்கலாம். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும். சனீஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும். சனி ஜெயந்தி நாளில், வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து வழிபட கடன் பிரச்சினை நீங்கும்.












Click it and Unblock the Notifications