தீபாவளி பண்டிகை: தன திரயோதசி தொடங்கி யம துவிதியை வரை என்னென்ன பூஜைகள்
தீபாவளி பண்டிகை தன திரயோதசி தொடங்கி யம துவிதியை வரை 5 நாட்கள் கொண்டாட வேண்டும் என்பது சாஸ்திர விதி. எந்தெந்த நாட்களில் என்னென்ன பூஜை செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
சென்னை: தீபாவளி பண்டிகை தன திரயோதசி தொடங்கி யம துவிதியை வரை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீப ஆவளி வரிசையாக விளக்குகளை வைத்து கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. நவம்பர் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 5 தினங்கள் கொண்டாடப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
செல்வம் பெருகும் தன திரயோதசி நவம்பர் 5 ஆம் தேதி யம திரயோதசியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாலை நேரத்தில் தெற்கு நோக்கி விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
கடந்த ஒரு மாதம் முன்பு மஹாளய பக்ஷ காலத்தின் போது எம லோகத்திலிருந்து வந்திருந்த நம் முன்னோர் நினைவாக நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு நம் கடமையை செய்திருப்போம். முன்னோர்கள் மீண்டும் யம லோகம் செல்ல அவர்கள் செல்லும் பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதற்காக தென் திசை நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் மாலை நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். இதன் மூலம் ஆண்டு முழுவதும் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் நோய் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பது நம்பிக்கை.
தன திரயோதசி
தன திரயோதசி நாளில் செல்வ வளம் பெருகும் வகையில் நம் வீட்டில் உள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் இந்த நாட்களில் முதலீடு செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை
நரக சதுர்தசி - யம சதுர்தசி நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே எழுந்து நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணையை உடல் முழுதும் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். அதில் நாயுருவி இலை சுரைக்காய் கோடி இலை போன்றவை சேர்த்து கொள்ளலாம். இதனால் லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும்.
பொதுவாக சூரியன் உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்து வர கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்த நரக சதுர்தசியில் மட்டும் செய்யலாம். இதனால் ஆரோக்கியம் உண்டாகும். உடலில் உள்ள சூடு குறையும். அதனால் வியாதிகள் நீங்கும். செல்வ வளம் பெருகும். குளித்து முடித்த உடன் சூரிய உதயத்தில் கிழக்கு நோக்கி இருந்து கொண்டு யமனுக்கும் சித்திர குப்தனுக்கும் யம தீர்த்தம் என தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை தாய் தந்தை உள்ளவர் இல்லாதவர் என அனைவரும் செய்யலாம்.
ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது. திதிக்கு சூரிய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். சதுர்தசியில் குளித்து விட்டு யம தர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும்.
அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை
அமாவாசை நாளில் 7-11-2018 புதன்கிழமை சூரியனும் சந்திரனும் சுக்கிரனின் வீட்டில் உள்ள தினம். அதனால் அன்றைய தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். லட்சுமி குபேர படம் அல்லது கலசம் வைத்து 21 எண்ணிக்கையில் அரளி மொட்டு அரளி இலை அப்பம் பக்ஷணம் வைத்து தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு வீட்டில் உள்ள நகைகளை பூஜையில் வைத்து அலங்காரம் செய்து வழிபட வேண்டும். அன்றைய தினம் கம்பளி ஆடைகளை ஏழை எளியோர்க்கு தானம் செய்ய வேண்டும்.
அகண்ட தீப பூஜை
அமாவாசை முடிந்த மறு நாள் பிரதமை நவம்பர் 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் துவங்குகிறது. இது சந்திரமான கணக்கு. பொதுவாக ஜோதிட ரீதியாக கால புருசனுக்கு மறைவு ராசியான விருச்சிக மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வருவது நல்லது. எந்த பாவத்தின் பலனும் அதன் ஏழாம் பாவம் குறிகாட்டும். அதன் படி விருச்சிகத்திற்கு 7ம் பாவத்தில் தான் கார்த்திகை நக்ஷத்திர மண்டலம் உள்ளது. அதன் உருவம் ஜோதி சுடர் வடிவம்.எனவே அன்றிலிருந்து 30 நாட்கள் அகண்ட தீப பூஜை என தினமும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் கடன் தீரும். பசு கன்றுக்குட்டி ஆடு போன்ற வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் நன்மை உண்டாக அவற்றை பூஜித்து உணவு தர வேண்டும்.
யம துவிதியை
அமாவாசை முடிந்து இரண்டாம் நாள் நவம்பர் 9 ஆம் தேதி துவிதியை யம துவிதியை பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இன்று சகோதரர்கள் சகோதரி வீட்டில் சாப்பிட்டு விட்டு பரிசு பொருட்களை பரிமாறி கொண்டு சந்தோஷமாக இந்த தீபாவளி கொண்டாட வேண்டும். எனவேதான் இந்த 5 நாட்கள் தீபாவளி பண்டிகை சாஸ்திரம் கூறுகிறது.