விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நேரம் : நினைத்த காரியம் நிறைவேற்றும் பிள்ளையார் விரதம்
விநாயகர் வழிபாடு காலம் காலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை செய்ய நல்ல நேரம் எப்போது என்று பார்க்கலாம்.
சென்னை: விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். பெரும்பாலானவர்களுக்கு இஷ்ட தெய்வமாக இருப்பவர் 'விக்னங்களை தீர்க்கும் விநாயகர்', என்று கூட சொல்லலாம். வெறும் கைகளோடு, இரு கை கூப்பி வணங்கி மூன்று தோப்புக்கரணம் போட்டு, தலையில் கொட்டு வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு வேண்டினாலே கேட்ட வரங்களை வாரி வழங்குபவர் விநாயகர். தும்பிக்கையான் விநாயகருக்கு விரதம் இருந்து வேண்டினால் நம் வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றுவார்.
ஒரு சமயம் விநாயகர் கயிலையில் நடனமாடிக் கொண்டிருந்தார் இவரின் நடனத்தை பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்தார். இதனால் கோபம் கொண்ட விநாயகர் சந்திரனை சபித்தார். இனி சந்திரன் உருவத்தை யாரும் காணமாட்டார்கள். கண்டவரும் நிந்தை செய்து ஒதுக்குவார்கள் நீசனாகட்டும் என்று சாபம் கொடுத்தார்.
விநாயகர் கொடுத்த சாபத்தால் சந்திரன் கலையிழந்து தேய்ந்து மெலிந்தான். சந்திரன் தன் செய்கைக்கு மிகவும் வருந்தி பின்னர் விநாயகரை சரண் அடைந்தான். தன்னை சரண் அடைந்தோருக்கு சகல நன்மைகளையும் தரும் விநாயகரும் மனமிரங்கி சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் சந்திரனைக் காண்போர் வீணான சங்கடங்களிற்கு ஆளாவர் என்றும் ஆனால் ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் விரதம் இருந்து வினாயகரை வணங்குபவர்கள் சகல சாப விமோசனமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்வர் எனவும் சந்திரனுக்கு சாப விமோசனம் அருளினார்.
ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே விநாயகர் சதுர்த்தி நாளாகும்.

விநாயகர் பூஜை செய்ய நல்ல நேரம்
விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து பூஜை செய்து வழிபடலாம். கணபதியை வழிபட வெள்ளிக்கிழமையான நாளை நல்ல நேரம் உள்ளது. காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை கணபதி ஹோமம் செய்ய மிகவும் நல்ல நேரமாகும். விநாயகர் பூஜை செய்ய காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் நல்ல நேரம் உள்ளது.
கெளரி நல்ல நேரம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையும் பகல் 1.00 மணி முதல் 1.30 மணி வரையும் நல்ல நேரமாகும். இதே போல காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையும் இரவு 09.30 மணி முதல் 10.30 மணி வரையும் பூஜை செய்யலாம்.

விநாயகர் விரத பூஜை
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, காலையிலேயே எழுந்து, பூஜை அறையை அலங்காரம் செய்து, தீபமேற்றி விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் மாலை அணிவித்து, மனதார உங்களது விரதத்தை தொடங்கலாம். முடிந்தவர்கள், எதுவுமே சாப்பிடாமல், சதுர்த்தி தினத்தன்று மாலை 6 மணி வரை, விரதம் இருக்கலாம். முடியாதவர்கள், வெறும் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் ல் மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட்டும் விநாயகர் வழிபாட்டை செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

பிள்ளையாருக்கு நைவேத்தியம்
விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள் சிலர் இருந்தாலும் கொழு கொழு பிள்ளையாருக்கு படைக்க பல வீடுகளில் கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, பழங்கள், வசதிக்கு ஏற்ப இனிப்புகள் என பட்சணங்களை தயார் செய்வார்கள். இதுவே பிள்ளையாரை சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்துப்போக காரணமாகிறது.

பிள்ளையார் உருண்டை
சில பேர் விநாயகருக்கு பிள்ளையார் உருண்டை என்று படைப்பார்கள். பச்சரிசியை தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீர் ஊற்றி மாவாக அரைத்துக் கொள்வார்கள். இட்லி மாவு ஆட்டுவது போல கொஞ்சம் நறநறப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அரிசி மாவோடு, வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி, கொழுக்கட்டை பிடிப்பது போலவே, பிள்ளையார் உருண்டை பிடித்து வைத்து வழிபாடு செய்வார்கள்.

விநாயகருக்கு வேண்டுதல்
பிரசாதம் செய்து வழிபடுவதில் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. உங்களுக்கு நிறைவேறாத வேண்டுதல் ஏதாவது மனதில் இருந்தால், அதை விநாயகரிடம் சொல்லுங்கள்! அப்படி சொல்லும்போது, ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். நீங்கள் வைக்கக்கூடிய அந்த வேண்டுதல் அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள், நிறைவேற வேண்டுமென்றும் வேண்டுதல் வையுங்கள். பிள்ளையார் உருண்டையை 11, 21, 51, 101 இப்படி ஒற்றைப்படையில் பிள்ளையார் உருண்டைகளையோ அல்லது கொழுக்கட்டைகளையோ பிடித்து விநாயகருக்கு முன்பு நைவேத்தியமாக படைக்க வேண்டும். உருண்டைகளை பிடிக்கும் போதே உங்களது வேண்டுதலை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.பூஜை முடிந்தவுடன் அந்த உருண்டைகளை, உங்கள் வீட்டில் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட வேண்டும்.

வேண்டுதல் நிறைவேறும்
விநாயகரிடம் மனதார அந்த உருண்டைகளை நைவேத்தியமாக படைக்கும் போது, என்னுடைய வேண்டுதல்கள் அடுத்த வருடத்திற்குள் நிறைவேற்றி விட்டால், அடுத்த விநாயகர் சதுர்த்திக்கும் இதேபோல் நைவேத்தியத்தை வைத்து விரதமிருந்து பூஜை செய்வதாக வேண்டிக் கொள்ளுங்கள். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகரது கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். நீங்கள் எந்த வேண்டுதலை வைத்தீர்களோ, அந்த வேண்டுதலுக்கு, அடுத்த 11வது நாள் நிச்சயம் ஒரு வழி கிடைத்திருக்கும்.

தோஷங்கள் நீங்கும்
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இப்படிப்பட்ட தோஷ நிவர்த்திக்கு கூட சதுர்த்தி விரதம் நல்ல பலனை கொடுக்கும். பிள்ளைகளின் படிப்பில் பிரச்சினை இருப்பவர்கள், பிள்ளைகளின் வாழ்க்கையில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த விநாயகர் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால், அவர்கள் வாழ்க்கையில் தெளிவு பிறக்கும். பெற்றோர்களின் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.












Click it and Unblock the Notifications