செவ்வாய்கிழமை முடி, நகம் வெட்டினால் துரதிர்ஷ்டம் மட்டுமல்ல நோய்களும் தாக்குமாம்
செவ்வாய்கிழமைகளில் முடியோ நகமோ வெட்டக்கூடாது என்று சொல்வார்கள். முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொன்னதை மீறி முடியோ நகமோ வெட்டினால் துரதிர்ஷ்டம் ஏற்படுவதோடு உடல்நலத்தி
மதுரை: செவ்வாய்கிழமை நகம் கடிக்காதீங்கள் என்று அம்மா வாயிலேயே போடுவார்கள். சேவிங் செய்யவோ, முடி வெட்டவோ கூடாது என்று பாட்டி சொல்லுவார்கள், அதைக்கேட்கும் இன்றைய இளசுகள் தினசரி ஷேவ் செய்யாவிட்டால் பிரச்சினையாகிவிடும் என்று எகிறுவார்கள். செவ்வாய்கிழமை முடியோ, நகமோ வெட்டினால் செல்வம் சேராது மாறாக துரதிர்ஷ்டமும் நோயும் வரும் என ஜோதிட ரீதியாக ஃசொல்கின்றனர்.
மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.
தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.
மங்களகாரகன் செவ்வாய்
செவ்வாய் பகவான் பூமா தேவிக்கும் மகாவிஷ்ணுவிற்கு மகனாக அவதரித்தவர் என்கிறது புராணம். செவ்வாய்க்கு மங்களகாரகன், குஜன் என்ற பெயரும் உண்டு. கு என்றால் பூமி, ஜன் என்றார் பிறந்தவர். மத்திய பிரதேசத்தின் தலைநகரான உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்களநாதர் சிவாலயம், செவ்வாய் அவதரித்த தலமாகும். இதனால் இது அங்காரக ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் தலமாக கருதப்படுகிறது.
மங்களநாதர்
நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், செவ்வாய் பிறந்த தலமாக உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் உள்ளதால், இங்குள்ள வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. செவ்வாய் பகவான், செந்நிற மேனி, புன்னகை பூத்த முகம், நான்கு கைகள், கதை, சக்தி ஆயுதம், சூலம் ஏந்தி வரத முத்திரையுடன் விளங்குபவர். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயத்தில் செவ்வாய் பகவான், மங்களநாதர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில் மூலவருக்கு எதிரில் நந்தி சிலை இருக்கும். ஆனால் இங்கு மங்களநாதர் கருவறையின் முன்பு செவ்வாய் பகவானின் வாகனமாக கருதப்படும் ஆடு உருவம் வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் பிறந்த கதை
அந்தகாசுரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி தவமிருந்தது வரம் பெற்றான். அதாவது எனது ரத்தம் தரையில் விழும் போது அதில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும் என்பதுதான் அந்த வரம், அதை கொடுத்தார் சிவன். அந்த வரம் பெற்ற அரக்கன் சும்மா இருப்பானா எல்லாரையும் கொடுமைப் படுத்தினான். ஒருமுறை சிவனை எதிர்த்து போரிட்டான். பல ஆண்டுகள் நடந்த போரில் சிவனின் உடல் பகுதியில் இருந்து விழுந்த வியர்வை சொட்டுக்கள் மூலம் பூமி பிளந்தது, செவ்வாய் உருவானது என்கிறது புராணம். அந்தகாசுரனின் ரத்தத் துளிகளை உள்வாங்கிக் கொண்டதால் செவ்வாய் சிவப்பாக காணப்படுகிறாராம்.
லட்சுமி தினம்
செவ்வாய்கிழமைகளில் மங்களகரமான செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது எனவேதான் அன்றைய தினம் முடி, நகம் வெட்டக்கூடாது என்கின்றனர்.
பணவரவு தினம்
செவ்வாய்கிழமை மகாலட்சுமி நம் வீடு தேடி வரும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பணத்தை தானாமாகக் கொடுக்க மாட்டார்கள். அன்றைய தினம் உப்பு, தயிர் கூட தானமாக தரக்கூடாது அப்படி கொடுத்தால் மகாலட்சுமி நம்மை விட்டு சென்று விடுவார் என்பது ஐதீகம்.
ஒட்டடை அடிக்கக் கூடாது
பொதுவாக செவ்வாய்கிழமை வீடு துடைக்கவோ, ஒட்டடை அடிக்கவோ கூடாது விளக்கு துடைக்கவோ, விளக்கவோ கூடாது. அப்படி செய்தால் லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாராம். அதே போல நகமோ, முடியோ வெட்டக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதிர்ஷ்டம் போய் துரதிர்ஷ்டம் குடியேறும் என்றும் சொல்கின்றனர். அப்படி மீறி முடி வெட்டி ஷேவிங் செய்தால் வாழ்நாளில் எட்டு மாதங்கள் குடியேறுமாம்.
ரத்த பாதிப்பு
செவ்வாய் பகவன் ரத்தக் காரகன். ரத்தத்தில் இருந்து முடி வளர்கிறது. செவ்வாய்கிழமைகளில் முடியை வெட்டினால் ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படுமாம். அதே நேரம் சனியின் தாக்கம் குறைந்து செவ்வாயின் தாக்கம் அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள். முன்னோர்கள் எதையும் சும்மா சொல்லி வைத்திருக்க மாட்டார்கள் என்பது உண்மைதானோ.