பஞ்சம் தீர்த்த அம்மன்... குலசை அறம் வளர்த்த நாயகி ஆலயத்தில் வருஷாபிஷேகம்
குலசேகரன் பட்டினத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலைச் சார்ந்த அருள் தரும் அறம் வளர்த்த அம்பிகை சமேத காஞ்சி விஜய கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி: ஒரு காலத்தில் குலசையில் பஞ்சம் வந்த பொழுது இவ்வூர் அம்பிகை இரு நாழி நெல் உலவாக் கோட்டையாக சைவ வேளாளர்களிடம் கொடுத்து பஞ்சத்தை நீக்கியதாக கூறுகிறார்கள். 32 அறங்களையும் வளர்த்ததால் அறம் வளர்த்த அம்பிகை எனப் பெயர் பெற்றாள்.
குலசேகரன் பட்டினத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலைச் சார்ந்த அருள் தரும் அறம் வளர்த்த அம்பிகை சமேத காஞ்சி விஜய கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயில் தல வரலாறுப் படி மார்க்கண்டேயர் இக்கோயிலில் வந்து வணங்கிச் சென்றுள்ளார். மார்க் கண்டேயருடைய காலம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது.
பிருங்கி முனிவர் மற்றும் காரைக்காலம்மையார் வந்து வணங்கி சென்ற தலம். இங்குள்ள சிவலிங்கம் சுயம்பு ஆகும்.
மற்ற கோயில் சுயம்பு லிங்கங்களுக்கும் இங்குள்ள சுயம்பு அமைப்புக்கும் வித்தியாசத்தோடு தனித் தன்மை வாய்ந்ததாக உள்ளது. சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னால் (நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த) கும்பாபிசேகத்திற்காக பாலாலயம் செய்வதற்காக சிவலிங்கம் இருக்கும் இடத்தை தோண்டிய பொழுது அடுக்கடுக்காக கீழே போய்க் கொண்டிருந்தது.
அதாவது பூமிக்கு மேலே ஒரு ஆவுடை அதன் மேல் லிங்கம். பூமிக்கு கீழே ஒரு ஆவுடையும் அதன் மேல் ஒரு லிங்கமும்.
அதற்கு கீழேயும் மற்றொரு அடுக்காக ஒரு ஆவுடையும் லிங்கமும். இப்படியாக ஒன்பது அடுக்குகள் மாறி மாறி இருந்தது. அதற்கு கீழேயும் அவ்வடுக்குகள் சென்று கொண்டிருந்தது. தண்ணீர் ஊறி வந்த காரணத்தால் அதற்கு கீழே தோண்டாமல் அப்படியே விட்டு விட்டு மூடி விட்டார்கள் என எங்கள் ஊர் பெரியவர்கள் சொல்லி அறிகிறேன்.
கோயில் வெளிப்பிராகரத்தில் இக்கோயிலில் பணி புரிந்த சிதம்பர ஓதுவார், சரவண ஓதுவார், பண்டாரச்சிவ ஓதுவார் மற்றும் குமாரசாமி ஓதுவார் ஆகிய நான்கு ஓதூவார் மூர்த்திகளுக்கும் கல் திருமனி உள்ளது. அவர்கள் நால்வரும் உடன் பிறந்தவர்கள். இந்த நால்வர் பெருமக்கள்தான் கொழும்பு வரை சென்று வசூல் செய்து கொடி மர மண்டபத்தையும் அதில் தற்போது உள்ள கொடி மரத்தையும் ஸ்தாபித்ததாக பெரியவர்கள் சொல்லி அறியப் படுகிறது.
இதில் சிதம்பர ஓதுவார் சிறு குழந்தையாக இருக்கும் போது அம்பாளே வெள்ளித் தம்ளரில் ஞானப் பால் கொடுத்த தாக ஒரு வரலாறு உண்டு. வேறு எந்தக் கோயிலிலும் அங்கு பணி புரிந்த ஓதுவார்களுக்கு கல் திருமேனி கிடையாது. இங்கு மட்டுமே உள்ளது.
அதில் சிதம்பர ஓதுவார் என்பவரின் நான்கு மற்றும் ஐந்தாவது வாரிசுகளான சிவானந்தம் மற்றும் ரமணகிரி என்பவர்கள் இப்போதும் கோயிலில் வந்து திருமுறை பாடுகிறார்கள்.
காரைக்காலம்மையார் இவ்வூருக்கு வரும் போது சாதாரண பெண்ணுருவாகத்தான் வந்தார். இவ்வூரில்தான் பேயுருவம் பெற்றார். இக்கோயிலில் பேயுரு பெற்ற காரைக்காலம்மையார் உருவம் உற்சவராக நடராஜர் முன் உள்ளது. பேயுருவம் பெறுவதற்கு முன் உள்ள சாதாரண பெண் உருவம் சுதையாக சித்திர சபையில் நடராஜரின் கீழே உள்ளது. ஊர் எல்லையில் காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் அம்மையாருக்கு ஒரு கோயில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
தெய்வசிகாமணிக் கவிராயர் பாடிய பிள்ளைத் தமிழும், மற்றும் தொட்டிக்கலைசுப்பிரமணிய முனிவர் (சிவஞான போதம் இயற்றிய மாதவ சிவஞான முனிவரின் 12 சீடர்களில் ஒருவர் இக்கோயிலைப் பற்றி இயற்றிய குலசை உலாவும் உள்ளது.
சாதாரணக் கோயிலாக இருந்த கோயிலை கி. பி. 1268 முதல் 1310 வரை ஆண்ட மாறவர்ம குலசேகர பாண்டியனால் கற்றுளியாக மாற்றப்பட்டது. கோயிலில் பாண்டியர் கால வட்டெழுத்துக்களுடன் கூடிய சில செய்திகள் அம்மன் சன்னதி சுவற்றிலும் பிரகாரத்திலும் பதிக்கப் பட்டுள்ளது.
இரண்டு பிரம்மோற்சவங்கள் சித்திரையிலும் ஐப்பசியிலும் நடை பெறுகிறது. ஐப்பசித்திருவிழாவில் திருக் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 10 நாட்களிலும் வெவ்வேறு வாகனங்களில் அம்பிகை எழுந்தருளுகிறாள். இங்கு வந்த வணங்கிய மார்க்கண்டேயர் சிவபூசை பண்ணுகிற காட்சி தட்சிணாமூர்த்தி அருகில் சுவற்றில் உள்ளது. பிருங்கி முனிவர் உருவம் மகா மண்டபத்தில் தூணில் உள்ளது.
நவ கிரக மேடையில் சூரிய பகவான் தன் இரு தேவியராகிய உஷா மற்றும் சாயா தேவியுடன் உள்ளார். இந்த உஷா என்பதிலிருந்துதான் உஷத் காலம் எனப் பெயர் வந்ததது. ஒரு காலத்தில் குலசையில் பஞ்சம் வந்த பொழுது இவ்வூர் அம்பிகை இரு நாழி நெல் உலவாக் கோட்டையாக சைவ வேளாளர்களிடம் கொடுத்து பஞ்சத்தை நீக்கியதாக கூறுகிறார்கள். 32 அறங்களையும் வளர்த்ததால் அறம் வளர்த்த அம்பிகை எனப் பெயர் பெற்றாள்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்: 3 துறைகளுக்கு முக்கியத்துவம்?.. என்னென்ன துறைகள்?
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மட்டுமே இக் கோயிலில் பூஜை செய்து வருகிறார்கள். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் அடியேன் சிறு வயதாக இருக்கும் போது இக்கோயிலில் பூஜை செய்த சிவாச்சாரியாரின் நான்காவது வாரிசாக உள்ளவர் இப்போது சிறப்பாக பூஜை செய்து வருகிறார்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நாளை 10.4..22 ஞாயிறன்று சைவ வேளாளர் பெருமக்களால் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.