உங்க ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சியா? உச்சமா? நீசமா? நீசபங்கமா?
சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையை பொருத்தே பலன்கள் கிடைக்கும்.
Recommended Video
சென்னை: அவனுக்கு என்ன ராஜா, சுகவாசி. சுக்ரதிசை அடிக்குதுப்பா என்று பேசுவார்கள். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றாலோ, நீசம் பெற்றாலோ, நீசபங்கம் அடைந்தாலோ என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
அசுர குருவான சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். களத்திரகாரகன், இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். ஒருவருக்கு பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம் போன்றவைகளை சிறப்புடன் வாழும் யோகத்தை தருவது சுக்கிரன்தான்
சுக்கிரன் காமத்துக்காரன் அதிகாலையில் விடி வெள்ளியாக உதித்து மனிதனுக்கு காமக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் இவர் தான். தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார்.
காமத்திற்கு அதிபதி
ரிஷபம், துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார். மீனம் ராசியில் உச்சமும், கன்னி ராசியில் நீசமடைகிறார் சுக்கிரன். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், காதல் கொண்டு சுகமடையும் தகுதி, சிற்றின்பம், திருமணம் முதலான நன்மைகளை ஆணுக்கு அளிப்பவர். பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், அழகான கணவனையும் சுக போகங்களில் திளைக்கும் ஆற்றலையும் வழங்குவார்.
சுகங்களை வழங்கும் சுக்கிரன்
சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.
சுக்கிரன் நீசம்
நீசம் - என்றால் கெட்டு நிற்பது என்று பொருள். சுக்கிரன் கன்னி ராசியில் நீசம் அல்லது 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், பணம் செலவு கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம்.
தாம்பத்ய வாழ்க்கை பாதிப்பு
சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால் களத்திர சுகங்கள் குறைவு, பெண்கள் வகை ஆதாய அனுகூலங்கள் குறைவு, சுகத்தானம் பலம் இழத்தல், ஆடை, ஆபரண வசதிகள், வண்டி வாகன வசதிகள் குறையும். களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் நீசமாய் இருந்தால் இலட்சுமி அருளில்லாமல் இருந்தால் தீய மனது அமைந்தவனாய் தனது வயதிற்கு மூத்தவளுடனே சேர்ந்து சுகம் இல்லாமல் எப்போதும் கவலையுடன் இருப்பான்.
ராஜ யோக பலன்
ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்து அதுவே நீசபங்கம் பெற்றிருக்குமானால் உச்சம் பெற்ற கிரகத்தை விட மேலான பலன்களைக் கொடுக்கும் இதையே நீசபங்க ராஜயோகம் என்கிறது ஜோதிடம். சுக்கிரன் நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், புதனுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடத்தில் இணைந்தாலும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும். நீச பங்கம் பெற்ற கிரகத்தின் திசை நடக்கும் போது நல்ல பலன்கள் கிடைக்கும்.
நோய்கள் என்ன?
ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்து இருந்தால் கண்நோய், கண் பார்வைக் கோளாறு போன்றவை உண்டாகும். சுக்கிலத்திற்கு அதிபதியாக இருப்பதால் விந்து குறைபாடு, விந்து அணு குறைபாடு ஏற்படும். ஆகையால் குழந்தை பாக்கியம், குழந்தை பாக்கியத்தடை குறைகள் ஏற்படும். கட்டி, பிளவை, மர்மஸ்தான நோய்கள், பால்வினை நோய்களும் ஏற்படும்.
சுக்கிரன் பரிகார தலம்
சுக்கிரன் பலம் பெற்றோ, குறைந்தோ இருந்தாலும், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசிக்கலாம். இது சுக்கிரன் தலமாகும். கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர தலத்தில் சுக்கிரன் தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார். இவரை வழிபட்டால் எல்லாவகைத் திருமணத் தடைகளும் நீங்கும். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் கோயில், சுக்கிரனுக்கு உரிய தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் கோளாறுகள் நிவர்த்தியாகும்.
வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பாள் கோயில்களில் நெய் விளக்கேற்றி வழிபடலாம். பௌர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம்.