சந்திரகிரகணம்: திருச்செந்தூரில் பூஜை நேரம் மாற்றம் - திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடையில்லை
சந்திர கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சந்திர கிரகண நேரத்தில் வழக்கம் போல கிரிவலம் செல்லலாம் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சந்திர கிரகணம் இன்று இரவு 12 மணி முதல் நாளை அதிகாலை 3.50 மணி வரையிலும் ஏற்படுகிறது.
இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பூஜை நேரம் மாற்றம்
இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கோவில் நடை மூடப்படுகிறது. இரவு 10 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
இரவு 10.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, இரவு 10.50 மணிக்கு சுவாமி மீது பட்டு சாத்தப்பட்டு, கோவில் நடை மீண்டும் மூடப்படுகிறது.
சந்திர கிரகணம் முடிந்த பின்னர் நாளை சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது.
அண்ணாமலையார் கிரிவலம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், இன்று அதிகாலை 12.24 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 2.23 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, இன்றும், நாளையும் கோயிலில் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. விரைவு பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பௌர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரத்தில், முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. ஆனாலும், தடையின்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடலாம், கோயில் வழிபாடுகளில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயில் ஆன்மிக வழக்கப்படி, சந்திர கிரகணம் முடியும் அதிகாலை 3.49 மணியளவில், கோயில் பிரகாரத்துக்குள் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தத்தில், தோஷ நிவர்த்திக்காக அஸ்திர தேவர் தீர்த்தவாரி நடைபெறும் என்று கோயில் இளவரசு பட்டம் சிவாச்சாரியார் பி.டி.ரமேஷ்குருக்கள் கூறியுள்ளார்.
கர்ப்பிணிகள் கிரிவலம் செல்ல தடை
கிரகணத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நடை திறப்பு, பூஜைகளில் எந்தவித மாற்றமும் செய்வதில்லை. அதேபோல், சந்திர கிரகண நேரத்தில் பக்தர்கள் வழக்கம் போல கிரிவலம் செல்லலாம் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் கர்ப்பிணிகள் மட்டும் கிரிவலம் செல்லக்கூடாது என்று சிவாச்சாரியார் கூறியுள்ளார்.