சீதா பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை வாலில் கட்டி இழுத்த ராம பக்த அனுமான்... ராமேஸ்வரத்தில் சுவாரஸ்யம்
தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை விட்டு விட்டு வேறொரு லிங்கத்தை ராமர் பிரதிஷ்டை செய்யவே கோபம் கொண்ட ஹனுமான் அந்த சிவலிங்கத்தை வாலில் கட்டி இழுத்தார்.
ராமேஸ்வரம் : ராம பக்த அனுமான் தன் வாலினால் ராமலிங்கத்தை கட்டி இழுத்த சுவாரஸ்ய சம்பவம் ராமேஸ்வரத்தில் நிகழ்ந்துள்ளது. அனுமனுக்கு ஏன் அத்தனை கோபம் வந்தது. தான் கஷ்டப்பட்டு கொண்டு வந்த சிவலிங்க சிலையை விட்டு விட்டு கடற்கரை மணலில் சீதா தேவியார் செய்து கொடுத்த சிவ லிங்கத்தை ராமர் பிரதிஷ்டை செய்ததுதான் அனுமனின் கோபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் போது சிவலிங்கத்தை அனுமன் தான் வாலில் கட்டி இழுத்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு புனித தீர்த்தங்களில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டு வருவார்கள். அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் திதி கொடுக்கவும் பித்ரு கடன் தீர்க்கவும் ஏராளமானோர் ராமேஸ்வரம் செல்வதுண்டு.
ராமாயண இதிகாசத்தோடு தொடர்புடைய இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மூன்று நாட்கள் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பு இன்றி மூன்று நாட்கள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராமாயணத்தில் சீதையை இலங்கை நாட்டுக்கு கவர்ந்து சென்ற ராவணனை போரில் வதம் செய்தார் ஸ்ரீராமர். அவரை பற்றிய பிரம்மஹத்தி தோஷம் நீங்க பரிகார பூஜை செய்ய நினைத்தார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வர வடக்கே அனுமனை அனுப்பினார்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வந்து சேரவில்லை. நல்ல நேரத்திற்குள் பூஜை செய்ய வேண்டும் என்று எண்ணிய சீதை கடற்கரை மணலில் லிங்கம் செய்தார். அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து சீதை, ராமர், லட்சுமணர் வழிபட்டனர்.
சிவலிங்கத்தை தாமதமாக கொண்டு வந்த ஆஞ்சநேயர், கோபப்பட்டு மணல் லிங்கத்தை வாலினால் கட்டி இழுத்தார் அது முடியவில்லை.
உடனே அனுமரை சமாதானப்படுத்திய ராமர், தனக்காக அனுமர் கொண்டு வந்த விஸ்வநாதர் லிங்கத்திற்கு பிரதான பூஜைகள் செய்த பிறகே சீதை மணலில் செய்த ராமநாதர் லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படியே தற்போதும் பூஜைகள் நடைபெறுகிறது.
அதோடு, 'சீதை உருவாக்கி, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்தை தரிசனம் செய்வதால் கிடைக்கும் முழு பலனையும் ஒரு பக்தர் பெற வேண்டுமானால் அதற்குமுன் உன்னுடைய சிவலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும்' என்று கூறி அனுமனுக்கு ஆசி அளித்தார்.
ராமேஸ்வரர் ஆலயத்தில் வடகிழக்கு பகுதியில் விபிஷணன் பிரதிஷ்டை செய்த ஸஹஸ்ரலிங்கம் அமைந்துள்ளது. இதையடுத்து காசி விசுவநாதர் சந்நதி உள்ளது. காசியில் விசுவநாதர் சந்நதி அமைந்திருக்கும் முறையிலேயே கருவறையை நீர் விட்டு நிரப்பும் அமைப்பிலேயே இங்கும் அமைந்துள்ளது.
அடுத்து ராமநாத சாமியின் மூலஸ்தானம். சீதை உருவாக்கிக் கொடுத்து ராமர் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்தை கருவறையில் தரிசிக்கலாம். ஐந்து தலை நாகம் குடைபிடித்த கவசம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. திருமேனியில் ருத்திராட்ச மாலை, பதக்கங்களுடன் ராமலிங்கர் பேரருள் பொழிகிறார். ராமரின் சிலை முன்மண்டபத்தில் அமைந்துள்ளது.
அன்று ராமர் அனுமனுக்கு ஆசி கூறியபடியே வழிபாடு இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதாவது அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கு பூஜைசெய்து முடித்த பின்புதான் ராமலிங்கத்திற்கு (ராமநாதசாமி) பூஜை செய்யும் வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது.
இந்த நிகழ்வினை நினைவு கூறும் விதமாகவே இன்றைக்கும் ராமலிங்க பிரதிஷ்டை தினம் கொண்டாடப்படுகிறது. விபீசணருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற மறுநாள் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
அர்ச்சகர் ஒருவர் சிவலிங்கத்தை சுமந்தபடி முதல் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து கருவறையில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்து ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும்.
ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவையொட்டி கோவிலின் விஸ்வநாதர் சன்னதி முன்பு புனித நீர் அடங்கிய 12 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. புனிதநீர் அடங்கிய கலசங்கள் சாமி சன்னதி பிரகாரம் வழியாக கொண்டுசென்று கருவறையில் உள்ள சாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஆஞ்சநேயர் வேடம் அணிந்த கோவில் குருக்கள் சந்தோஷ், விசுவநாதர் சன்னதியில் இருந்து சாமி விக்ரகத்தை தோளில் வைத்து தூக்கியபடி முதல் பிரகாரத்தில் ஆடியபடி வலம் வந்தார். தொடர்ந்து சாமி விக்ரகம் கருவறையில் வைக்கப்பட்டது. பின்னர் சாமி, அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் சாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலின் 3ஆம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.