திருமலை திருப்பதியில் நாளை ரத சப்தமி விழா - ஏகாந்தமாக நடைபெறும் மினி பிரம்மோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா நாளை 8ஆம் தேதி நடக்கிறது.
திருப்பதி: திருமலை திருப்பதியில் ரத சப்தமி விழா நாளை ஏகாந்தமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா நாளை 8ஆம் தேதி நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலையில் இருந்து இரவு வரை 7 வாகனச் சேவை நடக்கிறது. மினி பிரம்மோற்சவம் என்று ரத சப்தமி விழா அழைக்கப்படுகிறது.
பொதுவாக பிரம்மோற்சவ நாட்களில் தினசரியும் காலை மாலைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி
ரத சப்தமி நாளில் ஒரே நாளில் 7 வாகன சேவையை தரிசனம் செய்யலாம். 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும், மலையப்பசாமி தனித்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். வாகன சேவைகள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருட வாகன சேவை
முதல் வாகனச் சேவையாக இன்று காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனச் சேவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகனச் சேவை, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகனச் சேவை நடைபெறும்.

கல்ப விருட்ச வாகன சேவை
மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனச் சேவை, மதியம் 2 மணியில் மாலை 3 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும் தொட்டியில் சக்கர ஸ்தானம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகன சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனச் சேவையும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகனச் சேவை நடைபெறுகிறது.

ரத சப்தமி விழா
ரத சப்தமி விழாவையொட்டி நாளைய தினம் வழக்கமாக கோவிலில் நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழாக்கள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெற்ற நிலையில் ரத சப்தமி விழாவும் ஏகாந்தமாக நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications