சமயபுரம் மாரியம்மன் கோவில் பஞ்சப்பிரகார விழா - வசந்த உற்சவம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் வசந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15ஆம் தேதி அன்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெறுகிறது.
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்ச பிரகார விழா வசந்த உற்சவத்துடன் தொடங்கியது. வரும் 15ம் தேதி பஞ்சப்பிரகார அபிஷேகம் நடைபெறுகிறது. இவ்விழா வருகிற 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும். அம்பாளுக்கு நடைபெறும் 5 பெரும் உற்சவங்களில் பஞ்சபிரகாரம் என்பது வசந்த உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் இந்த விழா எடுக்கப்படுகிறது.

பஞ்சபூதங்கள், ஐம்பெருங்கலை, ஐம்பெரும்பீடம், ஐம்பெரும் உயிர் அவஸ்தைகள் ஆகியவற்றை விளக்கும் விதத்திலும் மாயாசூரனை அம்பாள் வதம் செய்த வெப்பத்தின் வேகத்தை தணிப்பதற்காகவும் பஞ்சப்பிரகாரம் எனும் வசந்த உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.
இதன்படி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஞாயிறுக்கிழமையன்று பஞ்சப்பிரகார விழா வசந்த உற்சவத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15ஆம் தேதி அன்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெறுகிறது.

அன்றைய தினம், கோவிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் பரிவாரங்கள் புடைசூழ, மேளதாளத்துடன் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் திருமஞ்சனத்துடன் சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை அம்மனுக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் அம்மன் மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்றும், தங்க கொடிமரம் 2-வது சுற்றும், தங்க ரதம் வலம் வரும் பிரகாரம் 3-வது சுற்றும், தெற்கு ரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் 4-வது சுற்றும், கீழரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதியில் 5-வது சுற்றாகவும் சுற்றி வந்து பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது.

இதையொட்டி முதல்நாள் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு கோவிலின் முதல் பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 14ஆம் தேதி அம்மன் ரிஷப வாகனத்திலும், 16ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 17ஆம் தேதி முத்துப்பல்லக்கிலும், 18ஆம் தேதி தங்க கமல வாகனத்திலும், 19ஆம் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், 20ஆம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21ஆம் தேதி கற்பக விருஷ வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி, உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.












Click it and Unblock the Notifications