புத்திரபாக்கியம் தரும் குமார சஷ்டி விரதம் - சுப்ரமணியரை வணங்க சுந்தரமாக பிள்ளை பிறக்கும்
திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் ஆனந்த சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம்.
மதுரை: முருகனைத் தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம். ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் ஆகும். வரும் வியாழக்கிழமை குமார சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
சுப்ரமணியரை விரதம் இருந்து வழிபட நாக தோஷம் நீங்கி சுந்தரமாக பிள்ளை பிறக்கும்.
கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் சுப்பிரமணிய சஷ்டி' என்றும், ஆனந்த சுப்பிரமணிய பூஜை' ஆகும். ஆனந்த சுப்பிரமணிய பூஜை: ஆனந்தன் = நாகம். சுப்புராயன் என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராகும்.
சுப்பிரமணியன், முருகன், தண்டாயுதபாணி, வேலவன், ஆறுமுகம் என பல்வேறு நாமங்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். சிவனின் அருளால் தோன்றி அந்த சிவனுக்கே வேதத்திற்கு பொருளை கூறியவன் முருகன். தண்தமிழ் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமானை தமிழ் புலவர்கள் அனேக நூல்கள் பாடியுள்ளனர்.

குழந்தை பாக்கியம்
ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச்செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையே! அந்த கனவு நனவாகி பிள்ளை பிறக்கும்போது தாய் தந்தையர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

குழந்தை பிறப்பதில் தடை
வேத சாஸ்திரங்களும் புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன. ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் அல்லது ஐந்தாம் வீடு புத்திர ப்ராப்தியை குறிக்கும் இடமாகும். குரு புத்திரகாரகன். ஜாதகத்தில் குரு கெடாமல் இருந்தால், குரு புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்த்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு இருக்கும். குரு புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குழந்தைப் பேறு இருக்கும் என்று சில ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

புத்திரகாரகன் குரு
ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும். செவ்வாய்பகவானுக்கு அதிபதி முருகன். முருகன் அருள் இருந்தால் அந்த தமிழ் கடவுள் முருகனைப் போல புத்திரன் பிறப்பார் என்பது நம்பிக்கை.

ஆனந்த சுப்பிரமணிய பூஜை
நாக தோஷம் இருந்தால் புத்திரபாக்கியத்தில் தடை ஏற்படும். நாக தோஷம் நீங்க சுப்ரமணியரை சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபடலாம்.
சிவபெருமானால் நெருப்பால் உருவாகி, காற்று கடவுளால் சரவண பொய்கையில் விடப்பட்டு, பின் 6 வடிவம் கொண்டு எழுந்து நின்றான் முருகன். இதை கருத்தில் கொண்டே முருகன் நாக வாகனத்தில் வருகை புரிகிறான். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் ஆனந்த சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும்.

நாக தோஷம் நீங்கும்
முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, படமெடுத்து ஆடும் பாம்பின் கீழ் அமர்ந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும். நாக சுப்பிரமணியர் வழிபாடு கர்நாடக மாநிலத்தில் அதிகமாக உள்ளது. இத்தகைய வடிவம் எளிதில் கிடைக்காது.

குக்கே சுப்ரமணியர்
கர்நாடக மாநிலத்தில் உள்ள குக்கே ஸ்ரீ சுப்ரஹ்மண்யா கோவிலில் அருள்பாலிக்கும் முருகனை நினைத்து விரதம் இருந்து வணங்கலாம். கடுமையான நாக தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்தில் சர்ப சம்ஸ்கார பூஜையில் பங்கேற்று வழிபட தடைகள் நீங்கி புத்திரபாக்கியம் கிடைக்கும். அங்கு செல்ல முடியாதவர்கள் வள்ளி தெய்வானை சமேத முருகனை வழிபடலாம்.

கருப்பையில் குழந்தை தங்கும்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பொதுவாகவே சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை தங்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விரதம் இருக்கலாம். கார்த்திகை மாத வளர்ப்பிறை சஷ்டி விரதமும், ஆனி மாத வளர்பிறை சஷ்டியான குமார சஷ்டி விரதமும் இருக்க புத்திர பாக்கியம் கிடைக்கும்.
பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்பதும் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications