மாதா பிறந்தநாள் கோலாகலம் : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி
அன்னையின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. காலையில் தஞ்சை மறைமாவட்ட பேராயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திரு விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத்தொடர்ந்து செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர் தேரும் கடைசியாக ஆரோக்கிய மாதா சொரூபம் அடங்கிய பெரிய தேரும் பவனி வந்தன.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களால் கீழை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படுகிறது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலாத் தலமாகவும் இந்தப் பேராலயம் திகழ்கிறது.

உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுப்பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரையில் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இன்றி கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு இந்த இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார், பக்தர்கள் யாரேனும் கோவிலுக்கு வருகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நேற்று நடந்தது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத்தொடர்ந்து செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர் தேரும் கடைசியாக ஆரோக்கிய மாதா சொரூபம் அடங்கிய பெரிய தேரும் சென்றது. தேர்பவனி ஆலய வளாகத்தை சுற்றி வந்து தேர்கொட்டகையை அடைந்தது.
முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட்சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர். இந்த தேர் பவனியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இன்று அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. காலையில் தஞ்சை மறைமாவட்ட பேராயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடக்கிறது. தொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை
இதனிடையே சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அன்னை வேளாங்கண்ணி தேர்திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகர், சென்னை பெருநகர மாநகராட்சி 13வது மண்டலம், 181வது வட்டம், திருவான்மியூர் காவல் நிலைய சரகம், அடையாறு காவல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் வருடாந்திர திருவிழா ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும்.
49வது வருடாந்திர திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 29.08.2021 அன்று நடைபெற்றது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், பொது நலன் கருதியும் கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. இன்று தேரோட்டம் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க கோரப்படுகிறது. பொது மக்களும், பக்தர்களும் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்கட்சி மற்றும் நேரடி சமூக வலைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் இன்று பெசன்ட்நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் எனவும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கோரப்படுகிறது. அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட 28.08.2021 முதல் 08.09.2021 வரை அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த திருவிழா நாட்களில் பொதுமக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், பக்தர்களும் சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியோர்களது மேற்படி வழிகாட்டுதல்களை பின்பற்றி, இந்த கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்து விடு பட ஒத்துழைப்பு நல்கி தேரோட்டம் நடைபெறும் இன்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வதை தவிர்த்து சென்னை பெருநகர காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications